சேலத்தில் 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லாததால் மக்கள் அவதி


சேலத்தில் 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லாததால் மக்கள் அவதி
x
தினத்தந்தி 1 Feb 2020 11:00 PM GMT (Updated: 1 Feb 2020 9:09 PM GMT)

சேலத்தில் 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லாததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

சேலம்,

நாடு முழுவதும் வங்கிகளில் பணிபுரியும் வங்கி ஊழியர்களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், சிறப்பு ஊதியத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்களின் தொழிற்சங்கத்தினர் நேற்று முன்தினம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்தம் நீடித்தது. இதனால் வங்கிகளில் பல ஆயிரம் கோடிக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கி கிளைகள் உள்ளன. இந்த வங்கிகளில் பணியாற்றும் 3 ஆயிரம் ஊழியர்கள் நேற்று முன்தினம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும்பாலான வங்கிகளில் பண பரிவர்த்தனை வெகுவாக பாதிக்கப்பட்டது. வங்கிகளின் மெயின் அலுவலகங்களை தவிர இதர கிளைகள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன. வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

2-வது நாளாக ஆர்ப்பாட்டம்

சேலம் கோட்டை ஸ்டேட் வங்கி முன்பு மாவட்ட வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும், வாராக்கடனை வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக நேற்றும் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. சேலம் மாநகரில் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லாததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். அதேசமயம், வழக்கம்போல் வங்கிகள் செயல்படும் என்று வங்கிகளுக்கு சென்ற வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி சென்றதை காணமுடிந்தது. சேலம் மாநகரில் கோட்டை, சீரங்கபாளையம், செவ்வாய்பேட்டை, அழகாபுரம், சூரமங்கலம் பகுதிகளில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

90 சதவீத வங்கிகள்

இதேபோல், மேட்டூர், ஆத்தூர், எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், வீரபாண்டி, தாரமங்கலம், வாழப்பாடி, ஏற்காடு உள்பட மாவட்டம் முழுவதும் ஒருசில வங்கிகளை தவிர 90 சதவீத வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் வெறிச்சோடி காணப்பட்டன.


Next Story