தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய உணவு வணிகர்களுக்கு ரூ.41 ஆயிரம் அபராதம்


தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய உணவு வணிகர்களுக்கு ரூ.41 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 2 Feb 2020 10:45 PM GMT (Updated: 2 Feb 2020 5:19 PM GMT)

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய உணவு வணிகர்களுக்கு ரூ.41 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.

நாகப்பட்டினம்,

நாகை கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான வழி நடத்துதல் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை தாங்கினார். உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் வரலட்சுமி, முதன்மைக்கல்வி அலுவலர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் பேசியதாவது:-

அரசு மற்றும் தனியாக உணவு வியாபாரம் செய்பவர்கள் அனைவரும் உணவுப்பாதுகாப்பு தரங்கள் சட்டப்படி பதிவு, உரிமம் பெற்று உணவு வணிகம் மேற்கொள்ள வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது நோட்டீஸ் அளித்து அபராதம் விதிக்கப்படும். தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் உணவு பார்சல் மற்றும் உணவு பரிமாறுதல், சுகாதாரம் தொடர்பான விதிகளை மீறுவது போன்ற செயல்களுக்கு உடனே அபராதம் விதிக்கப்படும்.

ரூ.41 ஆயிரம் அபராதம்

நாகை மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய உணவு வணிகர்களுக்கு கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.41 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. உணவு வணிகர்கள் கட்டாயம் உணவு பாதுகாப்பு துறையின கீழ் உரிமம், பதிவு பெற்று விதிகளை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் பூங்கொடி, நுகர்வோர் அமைப்பு உறுப்பினர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், ஓட்டல் உரிமையாளர் சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story