நாளை கும்பாபிஷேகம்: பாதுகாப்பு பணியில் 5,500 போலீசார் டி.ஜி.பி. திரிபாதி ஆய்வு


நாளை கும்பாபிஷேகம்: பாதுகாப்பு பணியில் 5,500 போலீசார் டி.ஜி.பி. திரிபாதி ஆய்வு
x
தினத்தந்தி 3 Feb 2020 11:00 PM GMT (Updated: 3 Feb 2020 7:12 PM GMT)

தஞ்சை பெரியகோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு பணியில் 5,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக டி.ஜி.பி. திரிபாதி நேற்று ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவிலில் நாளை(புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தன்று 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தஞ்சை பெரியகோவில், யாகசாலை மட்டுமின்றி தஞ்சை நகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஏற்கனவே நகரில் இருந்த கண்காணிப்பு கேமராக்களுடன் புதிதாக 192 கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதால் மொத்தம் 300 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர 12 தற்காலிக போலீஸ் நிலையங்களும், நகருக்குள் வரும் வாகனங்களை சோதனை செய்ய 12 இடங்களில் சோதனைச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது. பெரியகோவிலுக்கு செல்லக்கூடிய பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

5,500 போலீசார்

கும்பாபிஷேக பாதுகாப்பு பணிக்கு திருச்சி மண்டலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். திருச்சி மண்டல ஐ.ஜி. அமல்ராஜ் தலைமையில் போலீஸ் டி.ஐ.ஜி.க்கள் லோகநாதன், பவானீஸ்வரி மற்றும் 10 போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 5,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் கும்பாபிஷேக பாதுகாப்பு பணி குறித்து ஆலோசனை கூட்டம் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது.

டி.ஜி.பி. திரிபாதி ஆய்வு

கூட்டத்திற்கு தமிழக டி.ஜி.பி. திரிபாதி தலைமை தாங்கினார். இதில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. அமல்ராஜ் மற்றும் டி.ஐ.ஜி.க்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பங்கேற்றனர்.

பெரியகோவில் கும்பாபிஷேகத்திற்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் டி.ஜி.பி. திரிபாதி ஆலோசனை மேற்கொண்டார்.

எளிமையான அணுகுமுறையை...

அப்போது அவர், போலீசார் சிறப்பாக பணியாற்ற வேண்டும். கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களிடம் போலீசார் கெடுபிடி எதுவும் மேற்கொள்ளாமல் எளிமையான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

பின்னர் கும்பாபிஷேக தினத்தன்று மக்கள் அதிகமாக கூடக்கூடிய புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ரெயிலடி, திலகர் திடல் ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த டி.ஜி.பி. திரிபாதி தஞ்சை பெரியகோவிலுக்கு வந்தார்.

பெரியகோவில் நுழைவு பகுதியில் நின்று புறக்காவல் நிலையத்தை பார்வையிட்ட அவர், கோவிலில் பக்தர்கள் எந்ெதந்த வழியாக அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதை கேட்டறிந்தார். பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள், மடாதிபதிகள் சென்று வருவதற்கு தனித்தனியாக சிறப்பு வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என போலீஸ் அதிகாரிகள் அவரிடம் விளக்கம் அளித்தனர்.

தயார் நிலையில்...

பின்னர் டி.ஜி.பி. திரிபாதி நிருபர்களிடம் கூறும்போது, பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு செய்தோம். கும்பாபிஷேக தினத்தன்று மட்டும் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய தயார் ்நிலையில் உள்ளோம். கும்பாபிஷேக விழாவில் ஒவ்வொரு நாளையும் சேர்த்தால் மொத்தம் 10 லட்சம் பேர் வருவார்கள் என்றார்.

வெடிகுண்டு கண்டறியும் குழு

தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் கூறும்போது, பாதுகாப்பு பணிக்காக தமிழகம் முழுவதும் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். கும்பாபிஷேக பாதுகாப்பு பணியில் 5,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 15 பிரிவுகளாக போலீசார் பிரிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். எப்படி பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். பக்தர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

நகர் முழுவதும் 17 போலீஸ் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 15 குற்றத்தடுப்பு குழுக்களும், 15 வெடிகுண்டு கண்டறியும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேக தினத்தன்று தங்கள் வீடுகளின் மாடியில் யாரையும் அனுமதிக்க வேண்டாம். அடையாளம் தெரியாத நபர்கள் சுற்றி திரிந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களை சந்தித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம்.

இதுவரை 372 இடங்களில் விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்தி இருக்கிறோம். நகரில் உள்ள விடுதிகளில் சோதனை நடத்தி வருகிறோம். தினமும் யார் தங்குகிறார்கள் என்ற விவரமும் பெறப்பட்டு வருகிறது. மேலும் 3 ஹெலிகேம் மூலமும் பக்தர்களை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Next Story