சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தையை மீட்டு தரக்கோரி தாய் தர்ணா


சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தையை மீட்டு தரக்கோரி தாய் தர்ணா
x
தினத்தந்தி 3 Feb 2020 11:00 PM GMT (Updated: 3 Feb 2020 8:40 PM GMT)

சேலம் கலெக்டர் அலுவலகத்தில், குழந்தையை மீட்டு தரக்கோரி தாய் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சங்ககிரி அருகே உள்ள காகாபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயா(வயது 40). இவர் தனது தந்தை காவேரி, தாய் ராசாத்தியுடன் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவரிடம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் அவர் கூறும் போது, ‘நான் எனது முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்தேன். இந்தநிலையில் எனக்கும் ஏற்கனவே திருமணமான வேறு ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் 13 ஆண்டுகளாக குடும்பம் நடத்தினேன். இதற்கிடையே எங்களுக்கு 4 வயதில் ஹரினிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் அவர் என்னைவிட்டு பிரிந்து வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். மேலும் அவர் எனது குழந்தையையும் அழைத்து சென்றுவிட்டார். என்னிடம் குழந்தையை கொடுத்துவிடுங்கள் என்று அவரிடம் பலமுறை கேட்டேன். ஆனால் அவர் எனது குழந்தையை காண்பிக்க மறுத்ததுடன் கொன்றுவிடுவதாக மிரட்டி வருகிறார். எனவே அவரிடம் இருந்து எனது குழந்தையை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

கலப்பு திருமணம்

மேட்டூர் பெரியசோரகை பகுதியை சேர்ந்தவர் இதய அரசு(23). இவர் வேறு ஒரு சமூகத்தை சேர்ந்த கல்லூரி மாணவியான யா‌‌ஷ்வினி(19) என்வரை காதலித்து கடந்த மாதம் திருமணம் செய்தார். இந்த நிலையில் இந்த கலப்பு திருமணம் செய்த தம்பதி தனது உறவினர்கள் சிலருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசாரிடம் அவர்கள் கூறும் போது, ‘நாங்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்களை சிலர் பிரிக்க பார்க்கிறார்கள். மேலும் எங்களுடைய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு கொலை மிரட்டலும் விடுக்கின்றனர். எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று கூறினர்.

Next Story