நெல்லையில் பரபரப்பு: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 12 பவுன் நகை திருட்டு மற்றொரு பெண்ணுக்கு வலைவீச்சு


நெல்லையில் பரபரப்பு: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 12 பவுன் நகை திருட்டு மற்றொரு பெண்ணுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 6 Feb 2020 11:00 PM GMT (Updated: 6 Feb 2020 9:50 PM GMT)

நெல்லையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 12 பவுன் நகையை திருடிச் சென்ற மற்றொரு பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை, 

நெல்லை மாவட்டம் பத்தமடையை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் அந்த பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 35). இவர் தனது கைக்குழந்தையுடன் தூத்துக்குடியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று இருந்தார்.

நேற்று முன்தினம் அவர் தூத்துக்குடியில் இருந்து நெல்லை புதிய பஸ் நிலையம் வரும் பஸ்சில் ஏறி வந்தார். அப்போது மகேஸ்வரி அருகே 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உட்கார்ந்து இருந்தார். அவர் அவ்வப்போது மகேஸ்வரியின் கைக்குழந்தையை தூக்கி கொஞ்சினார்.

பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் பஸ் வந்து கொண்டு இருந்த போது, அந்த பெண் கைக்குழந்தையை தூக்கினார். அப்போது தனது பையில் இருந்த ஒரு ரூபாய் நாணயத்தை தவற விட்டார். மகேஸ்வரி தவற விட்ட நாணயத்தை எடுத்து கொடுத்தார்.

அப்போது அந்த பெண், மகேஸ்வரி வைத்து இருந்த பையை திறந்து அதில் இருந்த சிறிய கைப்பையை திருடி மறைந்து வைத்து கொண்டார். அதை மகேஸ்வரி கவனிக்கவில்லை. பஸ் கோர்ட்டு பகுதிக்கு வந்ததும் அந்த பெண் அவசரமாக இறங்கி சென்றார்.

புதிய பஸ் நிலையம் வந்து இறங்கியதும், மகேஸ்வரி தனது பையை சரி பார்த்தார். ஆனால் நகை வைத்து இருந்த கைப்பை திருடப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில் 12 பவுன் தங்க நகைகள் இருந்தன.

இதுகுறித்து மகேஸ்வரி மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அருகில் உட்கார்ந்து இருந்த பெண் தனது நகைகளை திருடிச் சென்று விட்டதாக மகேஸ்வரி போலீசாரிடம் கூறினார். அந்த பெண் இறங்கி சென்ற கோர்ட்டு பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பெண்ணை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story