பெண்கள் வார்டில் போட்டியிட்டு துணைத்தலைவரான ஆண் தேர்தலை ரத்து செய்து கலெக்டர் நடவடிக்கை


பெண்கள் வார்டில் போட்டியிட்டு துணைத்தலைவரான ஆண் தேர்தலை ரத்து செய்து கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 8 Feb 2020 11:30 PM GMT (Updated: 8 Feb 2020 5:15 PM GMT)

கரூர் அருகே உள்ள சித்தலவாய் ஊராட்சியில் பெண்களுக்கான வார்டில் ஆண் ஒருவர் போட்டியிட்டு துணைத்தலைவரானார். இதையடுத்து அந்த தேர்தலை ரத்து செய்து கலெக்டர் நடவடிக்கை எடுத்தார்.

கிரு‌‌ஷ்ணராயபுரம்,

கரூர் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 27, 30-ந்தேதிகளில் உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் 2 கட்டமாக நடைபெற்றது. இதில் கிரு‌‌ஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட சித்தலவாய் ஊராட்சி 6-வது வார்டு பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளி யிடப்பட்டது. ஆனால் இந்த விவகாரம் யாருக்கும் தெரியவில்லை. இதனால் ஆண் வேட்பாளர்கள் ஜெயசீலன், கிரு‌‌ஷ்ணமூர்த்தி ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் கிரு‌‌ஷ்ணமூர்த்தி வெற்றி பெற்றார். பின்னர் நடந்த மறைமுக தேர்தலில் கிரு‌‌ஷ்ணமூர்த்தி ஊராட்சி துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

வேட்புமனு தாக்கல் செய்தபோதோ, மனுவை பரிசீலனை செய்தபோதோ இதை அதிகாரிகள் கண்டுபிடிக்கவில்லை. தற்போது தேர்தல் ஆணையத்தால் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதில், இந்த விவகாரம் வெளியில் வந்துள்ளது. இதையடுத்து கலெக்டர் அன்பழகன் உத்தரவுப்படி தேர்தல் அலுவலர், சித்தலவாய் ஊராட்சி 6-வது வார்டில் நடந்த தேர்தலை செல்லாது என்று ரத்து செய்து அறிவித்துள்ளார். இதுபற்றி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் கிரு‌‌ஷ்ணமூர்த்திக்கும் இந்த அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் செல்லாது

அந்த நோட்டீசில் கூறியிருப்பதாவது:-

கிரு‌‌ஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட சித்தலவாய் ஊராட்சி 6-வது வார்டு பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளி யிடப்பட்டது. இடஒதுக்கீட்டுக்கு மாறாக ஆண் வேட் பாளர்கள் ஜெயசீலன், கிரு‌‌ஷ்ணமூர்த்தி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்து, தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இதில் கிரு‌‌ஷ்ணமூர்த்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த ஜனவரி 11-ந்தேதி நடந்த மறைமுக தேர்தலில் கிரு‌‌ஷ்ணமூர்த்தி துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தகவல்கள் அனைத்தும் வட்டார வளர்ச்சி அலுவலர் மூலமாக மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இதுதொடர்பான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதில், 6-வது வார்டு உறுப்பினர் பதவி தேர்தல் இட ஒதுக்கீட்டுக்கு மாறாக நடந்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே இடஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தும், அதற்கு மாறாக நடத்தப்பட்ட 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான சாதாரண தேர்தல் மற்றும் துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் ஆகிய 2 தேர்தல்களும் செல்லாது என்றும், மேற்படி தேர்தல்களை ரத்து செய்தும் உத்தரவிடப்படுகிறது. சித்தலவாய் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவிக்கும் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வந்தவுடன் தேர்தல் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சட்டரீதியாக சந்திப்பேன்

இதுகுறித்து பதவி பறிக்கப்பட்ட கிரு‌‌ஷ்ணமூர்த்தி கூறுகையில், வேட்புமனு தாக்கல் செய்யும்போதும், வேட்புமனு பரிசீலனையின்போதும் நான் போட்டியிட்ட 6-வது வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது என்று கூறவில்லை. வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற மறைமுக தேர்தலில் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இப்போது திடீரென 6-வது வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது எனக்கூறி எனது உறுப்பினர் பதவியையும், துணைத்தலைவர் பதவியையும் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் அலட்சியமே இதற்கு காரணமாகும். இந்த விவகாரத்தை சட்டரீதியாக அணுக உள்ளேன், என்றார்.

Next Story