கோவை அருகே பயங்கரம்: தாய், தந்தையை வெட்டிக்கொன்ற தொழிலாளி மது வாங்க பணம் தராததால் ஆத்திரம்


கோவை அருகே பயங்கரம்: தாய், தந்தையை வெட்டிக்கொன்ற தொழிலாளி மது வாங்க பணம் தராததால் ஆத்திரம்
x
தினத்தந்தி 9 Feb 2020 12:30 AM GMT (Updated: 8 Feb 2020 6:55 PM GMT)

கோவை அருகே மது வாங்க பணம் தராததால் ஆத்திரம் அடைந்து தாய், தந்தையை வெட்டிக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கோவை,

கோவை மாவட்டம் பேரூரை அடுத்த விராலியூர் இந்திரா காலனியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 75). இவருடைய மனைவி துளசி (70). இவர்களது மகன் கார்த்திகேயன்(30). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி புவனேஸ்வரி என்ற மனைவியும், நிரஞ்சன்(5) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கார்த்திகேயன் சரிவர வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

இதனால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகேயனை பிரிந்து புவனேஸ்வரி தனது மகனுடன் க.க.சாவடி பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து நெல்லையை சேர்ந்த கார்த்திகா என்பவரை கார்த்திகேயன் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் அவர்களுக்கிடையேயும் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் கார்த்திகேயனை பிரிந்து கார்த்திகா நெல்லையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் தனது தாய், தந்தையுடன் கார்த்திகேயன் வசித்து வந்தார்.

குடிபோதையில் தகராறு

இந்த நிலையில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான கார்த்திகேயன் மீண்டும் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். மேலும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தாய், தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இதற்கிடையில் கடந்த 6-ந் தேதி கார்த்திகேயன் குடிபோதையில் தனது தாய் துளசியிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் அரிவாள்மனையால் துளசியின் காலில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று, வீடு திரும்பினார்.

இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திகேயன் மீது அவரது தந்தை சுந்தரம் ஆலாந்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பின்னர் கார்த்திகேயனை பிடித்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவரது தந்தை சுந்தரம் புகாரை வாபஸ் பெற்றதால், கார்த்திகேயனை போலீசார் நேற்று முன்தினம் மதியம் விடுவித்தனர்.

வெட்டிக்கொலை

இந்த நிலையில் அன்றைய தினம் இரவு மது வாங்குவதற்காக பணம் கேட்டு பெற்றோரிடம் தகராறு செய்தார். ஆனால் பணம் தர அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தாய், தந்தை என்றும் பாராமல் அவர்களை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் அங்கிருந்து கார்த்திகேயன் தப்பி ஓடிவிட்டார்.

கைது

இந்த சம்பவம் குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தாய், தந்தையை வெட்டி கொன்றுவிட்டு தப்பி ஓடிய கார்த்திகேயனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நரசீபுரம் பகுதியில் சுற்றித்திரிந்த கார்த்திகேயனை தேடிப்பிடித்து கைது செய்தனர்.

மது வாங்க பணம் தராத ஆத்திரத்தில் மகனே, தாய், தந்தையை வெட்டிக்கொன்ற இந்த பயங்கர சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story