முதல்-அமைச்சர் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து நெடுவாசலில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


முதல்-அமைச்சர் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து நெடுவாசலில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 9 Feb 2020 11:00 PM GMT (Updated: 9 Feb 2020 7:45 PM GMT)

முதல்-அமைச்சரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து நெடுவாசலில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

கீரமங்கலம்,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நேற்று நடந்த கால்்நடை பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழாவில், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். இதேபோல வேளாண்மையை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது. ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி அளிக்காது என அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு புதுக்கோட்டை மாவட்ட மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். நெடுவாசல் கிராமத்தில் முதல்-அமைச்சர் அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்து, கிராம மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். மேலும் கைபா அமைப்பினர் கடைவீதியில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கினார்கள்.

சட்டமன்றத்தில் தீர்மானம்

இது குறித்து போராட்டக்குழுவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் தட்சிணாமூர்த்தி கூறுகையில், 2017-ம் ஆண்டு முதல் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வந்தோம். தற்போது முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அறிவிப்பை வரவேற்கிறோம், அதற்காக நன்றி கூறி கொள்கிறோம். ஆனால் அறிவிப்போடு நிறுத்திவிடாமல் நடக்க உள்ள சட்டமன்றக் கூட்ட தொடரிலேயே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும் என நெடுவாசல் போராட்டக்குழு சார்பில் கோரிக்கை விடுக்கிறோம் என்றார். இந்தநிலையில் நெடுவாசல் போராட்ட குழுவினர் அமைச்சர் விஜயபாஸ்கருடன் சென்னை சென்று முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Next Story