ஆயில்யம் நட்சத்திரத்தையொட்டி நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது


ஆயில்யம் நட்சத்திரத்தையொட்டி நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 9 Feb 2020 10:30 PM GMT (Updated: 9 Feb 2020 9:35 PM GMT)

ஆயில்யம் நட்சத்திரத்தையொட்டி நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தைத்திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 9-வது நாளான நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. இந்த நிலையில் விழாவின் இறுதி நாளான நேற்று அதிகாலை 4.15 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

ஞாயிற்றுக்கிழமையன்று நாகராஜரை வழிபட்டால் நல்லது என்று கூறி மக்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் நாகராஜா கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். நேற்று ஆயில்யம் நட்சத்திரம் மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் ஒன் றாக வந்ததால் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

போலீஸ் பாதுகாப்பு

குமரி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் மக்கள் குடும்பம் குடும்பமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் வைத்தும் பக்தர்கள் வழிபாடு செய்தார்கள். பக்தர்கள் கூட்டத்தை பயன்படுத்தி யாரேனும் மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபடாமல் தடுக்க கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பின்னர் மாலையில் சாமி ஆறாட்டுக்கு எழுந்தருளல், இன்னிசை சொல்லரங்கம், பக்தி மெல்லிசை, ஆறாட்டு துறையில் இருந்து கோவிலுக்கு சாமி எழுந்தருளல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story