கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி


கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி
x
தினத்தந்தி 11 Feb 2020 10:00 PM GMT (Updated: 11 Feb 2020 5:51 PM GMT)

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

நாகர்கோவில், 

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த நோய்க்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ தாண்டி விட்டது. மேலும் இந்த வைரசால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு அனைத்து நாடுகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களுக்கான பயிற்சி முகாம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது. 

முகாமுக்கு மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். நகர்நல அதிகாரி கின்சால் முன்னிலை வகித்து பேசினார். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி சமூக மருந்தியல்துறை தலைவர் சுரேஷ்பாலன், பொது மருத்துவத்துறை பேராசிரியர் ஜாண் கிறிஸ்டோபர் ஆகியோர் விழிப்புணர்வு பயிற்சியை படக்காட்சிகளுடன் விளக்கினர். இதில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மகாதேவன்பிள்ளை, பகவதிபெருமாள், ராஜா, தியாகராஜன், ஜாண், ராஜா, சத்தியராஜ் மற்றும் மாநகராட்சி பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளின் 70-க்கும் மேற்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story