வைகை ஆற்றில் நீர்வரத்து இல்லாததால், ஆண்டிப்பட்டி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்


வைகை ஆற்றில் நீர்வரத்து இல்லாததால், ஆண்டிப்பட்டி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 11 Feb 2020 10:15 PM GMT (Updated: 11 Feb 2020 5:52 PM GMT)

வைகை ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் ஆண்டிப்பட்டி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆண்டிப்பட்டி, 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள 15-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு குன்னூர் வைகை ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் குன்னூர் வைகை ஆற்றில் இருந்து தேனி நகராட்சியின் சில பகுதிகளுக்கும் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக வைகை ஆறு-முல்லைப்பெரியாறு சந்திக்கும் இடமான குன்னூர் பகுதியில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட குடிநீர் உறைகிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மட்டுமே வைகை அணைக்கு வந்து கொண்டிருந்தது. இந்தநிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 100 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதனால் வைகை அணைக்கு தண்ணீர் வந்து சேராததால் குன்னூர் பகுதியில் வைகை ஆறு நீர்வரத்து இன்றி வறண்டு போய் காட்சியளிக்கிறது.

இதன்காரணமாக குன்னூர் வைகைஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகளின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து கொண்டே வருகிறது. போதிய மணல் பரப்பு இல்லாததால் கிணற்றில் நீர்சுரப்பது குறைந்துவிட்டது. இதன்காரணமாக குன்னூர் வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படும் பகுதிகளில் இனிவரும் நாட்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

குறிப்பாக ஆண்டிப்பட்டி சுற்றுவட்டாரத்தில் 15-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்கள் கடுமையாக பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே பாதிக்கப்படும் பகுதிகளில் குடிநீர் தேவையை சமாளிக்க மாற்று ஏற்பாடுகளை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story