ராமேசுவரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்


ராமேசுவரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்
x
தினத்தந்தி 12 Feb 2020 10:15 PM GMT (Updated: 12 Feb 2020 10:31 PM GMT)

ராமேசுவரம் சங்குமால் கடற்கரையில் பெரிய மிதவை போன்று மர்ம பொருள் கரை ஒதுங்கி கிடந்தது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அக்னிதீர்த்த கடற்கரை அருகே உள்ள சங்குமால் கடற்கரை பகுதியில் நேற்று சிவப்பு நிறத்தில் போயா என்று சொல்லக்கூடிய மிதவை போன்று மர்ம பொருள் கரை ஒதுங்கி கிடந்தது. இது பற்றி தகவல் கிடைத்ததும் கியூ பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முஸ்தபா மற்றும் கடலோர போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

கரை ஒதுங்கி கிடந்த அந்த மர்ம பொருளை பார்வையிட்டனர். 4 அடி நீளத்திலான அது 100 கிலோ எடைக்கு மேல் இருக்கும் என கூறப் படுகின்றது. இது பெரிய கப்பல்களில் பயன்படுத்தக்கூடிய பொருள் எனவும் கூறப்படுகிறது.

ஆழ்கடல் வழியாக சென்ற ஏதேனும் கப்பலில் இருந்து தவறி கடலில் விழுந்ததா? அல்லது இந்திய கடற்படை, இலங்கை கடற்படையின் பெரிய ரோந்து கப்பல்களில் இருந்து தவறி கடலில் விழுந்ததா? அல்லது வேறு ஏதேனும் மர்ம பொருளா? என்பது குறித்தும் உளவுப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரை ஒதுங்கிய அந்த பொருளை மீனவர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். 

Next Story