பெருமாநல்லூர் அருகே, வாலிபரிடம் வழிப்பறி செய்த 2 பேர் கைது


பெருமாநல்லூர் அருகே, வாலிபரிடம் வழிப்பறி செய்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 Feb 2020 10:15 PM GMT (Updated: 14 Feb 2020 12:15 AM GMT)

பெருமாநல்லூர் அருகே வாலிபரிடம் வழிப்பறி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பெருமாநல்லூர், 

அவினாசி பச்சாபாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது25). திருப்பூரிலுள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

பெருமாநல்லூர் அருகே காளம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த சதீசை 2 ஆசாமிகள் திடீரென்று வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்தனர்.

அப்போது சதீஷ் கூச்சலிட்டதால் அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து, வழிப்பறி செய்த 2 ஆசாமிகளையும் பிடித்து பெருமாநல்லூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருப்பூர், கே.செட்டிபாளையத்தை சேர்ந்த கோகுலகிருஷ்ணன்(26), காட்டன் மில் ரோடு பகுதியை சேர்ந்த முரளி என்ற மலர்மன்னன்(24) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். இதில் கோகுலகிருஷ்ணன் மீது அவினாசி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story