சீல் வைக்கப்பட்ட அரிசி ஆலையில் ரூ.10 லட்சம் எந்திரங்கள் திருட்டு - உரிமையாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு


சீல் வைக்கப்பட்ட அரிசி ஆலையில் ரூ.10 லட்சம் எந்திரங்கள் திருட்டு - உரிமையாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 14 Feb 2020 10:30 PM GMT (Updated: 14 Feb 2020 9:10 PM GMT)

வங்கி கடனை திரும்ப செலுத்தாததால் சீல் வைக்கப்பட்ட அரிசி ஆலையில், ரூ.10 லட்சம் மதிப்புள்ள எந்திரங்களை ஆலையின் உரிமையாளர் மற்றும் அவரது நண்பர் திருடிச்சென்றனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

காரைக்குடி, 

காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரை சேர்ந்தவர் பாண்டி. இவர் அப்பகுதியில் நவீன அரிசி ஆலை நடத்தி வந்தார். இந்த ஆலையை நவீனப்படுத்துவதற்காக பாண்டி காரைக்குடியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில், இந்த அரிசி ஆலையை அடமானமாக வைத்து ரூ.1 கோடி கடன் வாங்கியிருந்தார். ஆனால் கடனையோ, வட்டியையோ பாண்டி முறையாக வங்கிக்கு செலுத்தவில்லை. இதனால் வங்கி நிர்வாகம், கடனை திருப்பி செலுத்த அறிவுறுத்தி அரிசி ஆலை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனாலும் பாண்டி கடனை திரும்ப செலுத்தவில்லை.

இதனால் வங்கி நிர்வாகம் அரிசி ஆலைக்கு சீல் வைத்தது. இந்த நிலையில் பாண்டியும், தேவகோட்டையை சேர்ந்த அவரது நண்பர் கண்ணனும் சேர்ந்து அரிசி ஆலையின் சுவற்றை உடைத்து, உள்ளே புகுந்து அங்கிருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள எந்திரங்களை திருடிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த வங்கி முதன்மை மேலாளர் அன்வர் சதாத், பள்ளத்தூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் உத்தரவின்பேரில், அரிசி ஆலை உரிமையாளர் பாண்டி, கண்ணன் ஆகியோர் மீது பள்ளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவகி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story