பிளாஸ்டிக் இல்லாத நிலை தொடர ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் கலெக்டர் பேச்சு


பிளாஸ்டிக் இல்லாத நிலை தொடர ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 18 Feb 2020 10:30 PM GMT (Updated: 18 Feb 2020 6:43 PM GMT)

பிளாஸ்டிக் இல்லாத நிலை தொடர அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கலெக்டர் ஆனந்த் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து நடத்தும் அரசு பள்ளி ஒருங்கிணைப்பாளர்களுக்கான பிளாஸ்டிக் விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். முன்னதாக பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருட்கள் விழிப்புணர்வு கண்காட்சியை கலெக்டர் ஆனந்த் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக்பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நிலத்தை நீர் ஆதாரங்களை மாசுப்படுத்துவது மட்டுமில்லாது தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மாற்று பொருட்கள்

பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயம் குறித்து மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மாற்று பொருட்கள் பயன்படுத்த வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் இல்லாத நிலை தொடர அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், மாவட்ட சுற்றுச்சுழல் பொறியாளர் ராஜன், முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், உதவி கலெக்டர் ஜெயபிரீத்தா, மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ராம்மனோகர், மாவட்ட சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளர் நடனம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story