உடனுக்குடன் கொள்முதல் செய்யாததால் நெல் மூட்டைகளுடன் காத்து கிடக்கும் விவசாயிகள்


உடனுக்குடன் கொள்முதல் செய்யாததால் நெல் மூட்டைகளுடன் காத்து கிடக்கும் விவசாயிகள்
x
தினத்தந்தி 18 Feb 2020 11:30 PM GMT (Updated: 18 Feb 2020 6:57 PM GMT)

அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் உடனுக்குடன் கொள்முதல் செய்யாததால் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்து கிடக்கின்றனர். மேலும் குறைந்த விலைக்கு தனியாரிடம் நெல்லை விற்பனை செய்யும் அவல நிலையில் உள்ளனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் இந்த ஆண்டு 24 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் தலைஞாயிறு, பிராந்தியங்கரை, மூலக்கரை உள்ளிட்ட ஆற்று பாசன பகுதியில் சுமார் 12 ஆயிரம் எக்டேரும், ஆயக்காரன்புலம், வாய்மேடு, ஆதனூர், பஞ்சநதிகுளம் பகுதியில் 12 ஆயிரம் எக்டேரும் சாகுபடி நடைபெற்றது. தற்போது சம்பா அறுவடை பணி தாலுகா முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை வாங்க அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் வேட்டைக்காரனிருப்பு பகுதியில் உள்ள நேரடி அரசு கொள்முதல் நிலையத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை, இணையதள வசதி சரிவர கிடைக்காததால் உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய முடியவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளுடன் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் காத்து கிடக்கின்றனர். இதுபோன்ற நிலை தான் வேதாரண்யம் பகுதியில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் காணப்படுகிறது.

விவசாயிகள் கவலை

அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்க குறைந்தபட்சம் ஒரு வார காலம் காத்து கிடக்க வேண்டியுள்ளது. அறுவடை எந்திர தட்டுப்பாட்டால் விவசாயிகள் கூடுதலாக வாடகை கொடுத்து அறுவடை செய்து கொண்டு வந்து நெல்லை கொள்முதல் நிலையத்தில் விற்க முடியாமல் உள்ளதால் கவலை அடைந்துள்ளனர்.

பல விவசாயிகள் வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்து உள்ளனர். நெல்லை விற்பனை செய்து கடனை அடைத்துவிடலாம் என்று நினைத்த விவசாயிகளுக்கு, நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்ய முடியாததால் தனியாரிடம் குறைந்து விலைக்கு விற்பனை செய்யும் அவல நிலையில் உள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு பெருத்த ந‌‌ஷ்டம் ஏற்படுகிறது. எனவே நாள் ஒன்றுக்கு அரசு அறிவித்த ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story