குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: முஸ்லிம் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நாமக்கல்லில் நடந்தது


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: முஸ்லிம் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நாமக்கல்லில் நடந்தது
x
தினத்தந்தி 19 Feb 2020 11:30 PM GMT (Updated: 19 Feb 2020 10:05 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பினர் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நாமக்கல்,

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று தமிழக அரசு உறுதி அளித்து, அவற்றிற்கு எதிரான தீர்மானத்தை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தனர். இதையொட்டி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பள்ளிவாசல் முன்பு முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சட்டசபையில் தீர்மானம்

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நாமக்கல் மாவட்ட ஜமாத்துல் உலமாசபையின் தலைவர் முகம்மது இப்ராஹீம் தலைமை தாங்கினார். இதில் எஸ்.டி.பி.ஐ., தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, தவ்ஹீத் ஜமாத் மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள், முத்தவல்லிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இவர்கள் கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது போல தமிழகத்திலும் நிறைவேற்ற வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர். மேலும் மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

தள்ளு முள்ளு

இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் முஸ்லிம் இயக்கங்களின் முக்கிய நிர்வாகிகள் 10 பேரை கலெக்டரிடம் அழைத்து சென்றனர். அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் மெகராஜிடம் மனு கொடுத்தனர்.

இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தலைமையில் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதேபோல் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அருகே கலவர தடுப்பு போலீசாரும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

Next Story