வியாபாரிகள் வாங்க வராததால் வயல்களில் தேங்கி கிடக்கும் வைக்கோல் விவசாயிகள் கவலை


வியாபாரிகள் வாங்க வராததால் வயல்களில் தேங்கி கிடக்கும் வைக்கோல் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 20 Feb 2020 11:00 PM GMT (Updated: 20 Feb 2020 6:47 PM GMT)

நாகையில் வியாபாரிகள் யாரும் வாங்க வராததால் வயல்களில் வைக்கோல் தேங்கி கிடக்கிறது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் விவசாயிகள் நேரடி விதைப்பு மற்றும் நாற்றாங்கால் மூலம் சம்பா சாகுபடி செய்தனர். நாகை மாவட்டத்தில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 404 எக்டேர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டது. இதில் 95 ஆயிரத்து 354 எக்டேர் பரப்பளவில் சம்பாவும், 37 ஆயிரத்து 50 எக்டேர் பரப்பளவில் தாளடியும் செய்யப்பட்டது.

நாகையை அடுத்த செல்லூர், பாலையூர், பெருங்கடம்பனூர், சிக்கல், ஆழியூர், கீழ்வேளூர், திருமருகல், திட்டச்சேரி, வேளாங்கண்ணி, பூவைத்தேடி, திருமணங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தற்போது அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அறுவடை செய்த நெல்லை சாக்குகளில் கட்டி நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்து செல்லும் பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

வைக்கோல்

நாகை மாவட்டத்தில் 284 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நாகை, பாலையூர், செல்லூர், பெருங்கடம்பனூர் மற்றும் நாகையை சுற்றியுள்ள பகுதிகளில் எந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் வைக்கோலை சேகரிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வயல்களில் ஆங்காங்கே வைக்கோல் மலைபோல் குவித்து வைத்துள்ளனர்.

இதுகுறித்து நாகை மாவட்ட கடைமடை விவசாய சங்க தலைவர் தமிழ்செல்வன் கூறியதாவது:-

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரானது பல்வேறு தடைகளை தாண்டி கடைமடை பகுதியான நாகைக்கு வந்தது. குடிமராமத்து பணிகள் சிறப்பாக நடைபெற்றதால், சரியான முறையில் கிடைத்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டு வந்தனர்.

நல்ல மகசூல்

இதனால் எதிர்பார்த்த அளவுக்கு நாகை கடைமடை பகுதியில் சம்பா சாகுபடியில் நல்ல மகசூல் கிடைத்துள்ளது. ஆண்டுதோறும் கடலூர், ராசிபுரம், நாமக்கல், சேலம், தர்மபுரி, விருத்தாச்சலம் ஆகிய பகுதிகளில் இருந்து வைக்கோல் வாங்க வியாபாரிகளும், கால்நடை வளர்ப்போரும் வருவார்கள். தற்போது அந்த பகுதிகளில் விளைச்சல் அதிகமாக இருப்பதால், வைக்கோல் வாங்குவதற்கு வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் யாரும் வரவில்லை. அதற்கான வாய்ப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது. எனவே நாகையில் அறுவடை செய்யப்பட்ட வைக்கோல்களை வியாபாரிகள் யாரும் வாங்க வராததால் வயல்களில் அப்படியே தேங்கி உள்ளது. ஆதலால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

தேங்கி கிடக்கும் வைக்கோல்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வைக்கோல்களை மூலப்பொருளாக கொண்டு பேப்பர் தொழிற்சாலை அமைக்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கும்.

மேலும் வேலை வாய்ப்புகளும் உருவாகும். எனவே தேங்கியுள்ள வைக்கோல்களில் தண்ணீரை பாய்ச்சி, அதனை தழைச்சத்துக்காக பயன்படுத்தும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story