வேளாண் மண்டல பாதுகாப்பு மசோதா: காவிரி டெல்டா விவசாயிகள் வரவேற்பு


வேளாண் மண்டல பாதுகாப்பு மசோதா: காவிரி டெல்டா விவசாயிகள் வரவேற்பு
x
தினத்தந்தி 20 Feb 2020 11:30 PM GMT (Updated: 20 Feb 2020 7:07 PM GMT)

தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்துள்ள வேளாண் மண்டல பாதுகாப்பு மசோதாவுக்கு காவிரி டெல்டா விவசாயிகள் மிகுந்த வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

தஞ்சாவூர்,

தமிழக சட்டசபையில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவை காவிரி டெல்டா விவசாயிகள் வரவேற்று உள்ளனர். இது தொடர்பாக விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

டெல்டா விவசாயிகள் வரவேற்பு

விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜீவக்குமார்:- காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த சட்ட மசோதாவை வரவேற்கிறோம். இந்த அறிவிப்பின் மூலம் விவசாயத்திற்கு புத்துயிர் கிடைத்துள்ளது. அதேநேரத்தில் டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே 300-க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுப்பதற்கான பணிகள் நடைபெற்றுள்ளது. அந்த திட்டங்கள் மற்றும் குழாய்களை அகற்றினால்தான் இது முழுமை பெறும்.

நெற்களஞ்சியமாக இருந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் சமீபகாலமாக பாலைவனம் போல் ஆகி விட்டது. இந்த அறிவிப்பு மூலம் மீண்டும் பசுமையான சோலையாக மாறும். இந்த பகுதியில் வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் வேளாண்மை சார்ந்த திட்டங்களை கொண்டுவர வேண்டும்.

விவசாயிகள் நெஞ்சில் பால்

தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத்தலைவர் கக்கரை சுகுமார்:- காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தோம். தற்போது அதனை ஏற்று தமிழக அரசு அறிவித்து இருப்பதோடு, அமைச்சரவை கூட்டத்திலும் ஒப்புதல் அளித்து சட்டசபையில் மசோதா தாக்கல் செய்து விவசாயிகள் நெஞ்சில் பால்வார்த்துள்ளது. இதனை டெல்டா விவசாயிகள் முழு மனதோடு வரவேற்கிறோம். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான முதல்படி ஆகும். இதோடு நின்று விடாமல் மத்திய அரசிடம் இருந்து முழுவதுமாக போராடி தமிழக அரசு இதனை பெற்றுத்தர வேண்டும்.

காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் சுவாமிமலை விமலநாதன்:- தமிழக அரசு எடுத்துள்ள முயற்சி பாராட்டுக்குரியது. தமிழக அரசு சட்டசபையில் மசோதா தாக்கல் செய்தது மட்டும் போதாது, மத்திய அரசை வலியுறுத்தி மத்திய அரசும் சிறப்பு சட்டம் இயற்றி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.பி.க்களும் இதற்காக பெருமுயற்சி எடுத்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளும், பொதுமக்களும் ஜல்லிக்கட்டு போன்று பல்வேறு போராட்டங்களை நடத்தி மத்திய அரசை வழிக்கு கொண்டு வருவோம்.

விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள்

தமிழக விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் மாசிலாமணி:-காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு தமிழக அரசிற்கு பாராட்டுதலை தெரிவித்து கொள்கிறோம். எந்த சட்டமும் நிறைவேற்றுவதற்கு முன்பாக அதற்கான விதிமுறைகளை வகுத்து, சட்ட வல்லுனர்கள் உரிய ஆய்வு செய்து பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு நடைமுறைப்படுத்தும்போதுதான் முழுமை பெறும். எனவே இந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது விவசாயிகளுக்கு முழுமையான பலனை தராது.

தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் வரதராஜன்:- விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற சட்ட மசோதா தாக்கல் செய்த அரசிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை கொண்டு வர வேண்டும். விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் இடையே தரகர் இல்லாமல் விற்பனை செய்வதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும். அப்போதுதான் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பயன்தரும்.

முதல்-அமைச்சருக்கு நன்றி

காவிரி டெல்டா விவசாய சங்கங் களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஆறுபாதி கல்யாணம்:-

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க சட்ட மசோதாவை முன்மொழிந்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். குறைவான எரிசக்தி திட்டத்திற்காக வளமான விவசாய நிலங்களை வீணாக்குவது தவறு என்பதை மத்திய அரசும் உணர்ந்து நடைமுறையில் உள்ள ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களையும் கைவிட மத்திய அரசு உதவி செய்ய வேண்டும்.

பல்வேறு குறைபாடுகள்

காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன்:- காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள சட்ட மசோதா பல்வேறு குறைபாடுகளை கொண்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல நிர்வாகத்தை கவனிக்க முதல்-அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிற்கு மாறாக தன்னாட்சி அதிகாரம் உள்ள வல்லுனர் குழுவாக அமைத்திருக்க வேண்டும். அதில் உழவர் பிரதிநிதிகளும் கட்டாயம் இடம்பெற வேண்டும்.

இந்த சட்டத்தை கவர்னருக்கு அனுப்பும் முன்பு விரிவான ஆய்வு செய்து உரிய வல்லுனர்களை கொண்டு தேவையான திருத்தங்களை செய்து உண்மையாகவே வேளாண் மண்டலமாக மாற்ற வெளிப்படையாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story