பெண் வாடிக்கையாளர்களுடன் காம லீலை: “வங்கி அதிகாரியால் எனது உயிருக்கு ஆபத்து” போலீஸ் சூப்பிரண்டிடம் மனைவி பரபரப்பு புகார்


பெண் வாடிக்கையாளர்களுடன் காம லீலை: “வங்கி அதிகாரியால் எனது உயிருக்கு ஆபத்து” போலீஸ் சூப்பிரண்டிடம் மனைவி பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 20 Feb 2020 11:15 PM GMT (Updated: 20 Feb 2020 7:35 PM GMT)

பெண் வாடிக்கையாளர்களுடன் காமலீலையில் ஈடுபட்ட வங்கி அதிகாரி மீது மனைவி புகார் அளித்தார். இந்த நிலையில் அவரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார்.

தஞ்சாவூர்,

திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார்(வயது 36). இவர், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் காசாளராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கும், தஞ்சையை அடுத்த கள்ளப்பெரம்பூர் வகாப் நகரை சேர்ந்த தாட்சர்(32) என்பவருக்கும் கடந்த 2½ மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் திருமணமான நாள் முதலே மனைவியுடன் நெருங்கி பழகுவதை தவிர்த்து வந்த எட்வின் ஜெயக்குமார், பலமணி நேரம் அறைக்குள் செல்போனிலேயே நேரத்தை செலவழித்துள்ளார். மேலும் 50 பவுன் நகையை வரதட்சணையாக வாங்கி வருமாறு எட்வின் ஜெயக்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தாட்சரை துன்புறுத்தி உள்ளனர்.

பல பெண்களுடன் தொடர்பு

இதனால் சந்தேகம் அடைந்த தாட்சர், கணவரின் செல்பேனை பார்த்தபோது அதில் ஏராளமான பெண்களின் ஆபாச படங்கள் மற்றும் அந்த பெண்களுடன் தனது கணவர் நெருக்கமாக இருந்தது தெரிய வந்தது.

அந்த வீடியோவை பார்த்து தாட்சர் கடும் அதிர்ச்சி அடைந்தார். அந்த பெண்கள், தனது கணவர் பணிபுரிந்த வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் வங்கியில் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவருடனும் எட்வின் ஜெயக்குமார் தொடர்பில் இருந்துள்ளார்.

கொலை மிரட்டல்

தனது காம களியாட்டங்கள் மனைவிக்கு தெரிய வந்ததும் அவருக்கு எட்வின் ஜெயக்குமார் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து தாட்சர், தஞ்சை மாவட்டம் வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதனிடம் தாட்சர் புகார் அளித்தார். அவருடைய உத்தரவின் பேரில் வல்லம் அனைத்து மகளிர் போலீசார் சாதாரண பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டில் எட்வின் ஜெயக்குமார் உள்பட 5 பேரும் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து இவர்களுக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது.

போலீசார் வழக்கு

இதை அறிந்த தாட்சர், மதுரை ஐகோர்ட்டில் இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் மனு தாக்கல் செய்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய ஐகோர்ட்டு எட்வின் ஜெயக்குமார் உள்பட 5 பேருக்கு அளித்திருந்த முன்ஜாமீனை ரத்து செய்து அவரை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவின் பேரில் ஜாமீனில் வரமுடியாத பிரிவுகளின் கீழ் எட்வின் ஜெயக்குமார் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார், எட்வின் ஜெயக்குமாரை கைது செய்வதற்காக சென்றபோது அவர் உள்பட இந்த வழக்கில் தொடர்புடைய 5 ேபரும் தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது. தலைமறைவாக உள்ள 5 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

போலீசில் மனைவி புகார்

இந்த நிலையில் தாட்சர் தனது உறவினர்கள் மற்றும் வக்கீலுடன் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரனை சந்தித்து புகார் மனு அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-

எனக்கும், மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்த எட்வின் ஜெயக்குமாருக்கும் 2-12-2019-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு அவருடைய நடவடிக்கைகள் மூலம் பல பெண்களுடன் அவர் வைத்திருந்த ஆபாச மற்றும் பாலியல் ரீதியான தொடர்பு எனக்கு தெரிய வந்தது. இது குறித்து நான் கேட்டபோது என்னை கொலை செய்ய முயற்சி செய்தார். மேலும் அவரும், அவரை சார்ந்தவர்களும் என்னிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினர்.

உயிருக்கு ஆபத்து

இதையடுத்து வேறு வழியின்றி நான் போலீசில் புகார் செய்தேன். இந்த நிலையில் எட்வின் ஜெயக்குமார் எனக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதம் முழுவதும் முற்றிலும் பொய்யான சங்கதிகள் அடங்கியுள்ளன. தீய உள்நோக்கத்தோடு பல பொய்யான குற்றச்சாட்டுகளை என்மீது சுமத்தியுள்ளார். அன்பான மிரட்டல் கடிதமாக அந்த கடிதம் உருவாக்கப்பட்டுள்ளது. அவர் மீது குற்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலீசில் சிக்காமல் தலைமறைவாக ஒளிந்து கொண்டு சட்ட விரோதமான காரியங்களில் ஈடுபடுகின்றார்.

மேற்படி எட்வின் ஜெயக்குமாரால் என் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து நேரிடுமோ? என அஞ்சுகிறேன். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்து எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story