கொடுக்கல் வாங்கல் தகராறில், ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து; 2 பேர் கைது


கொடுக்கல் வாங்கல் தகராறில், ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து; 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 Feb 2020 9:30 PM GMT (Updated: 21 Feb 2020 7:43 PM GMT)

ராமநாதபுரம் அருகே கொடுக்கல் வாங்கல் தகராறில் ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் அருகே உள்ள குயவன்குடி பகுதியை சேர்ந்தவர் முருகவேல் (வயது 45). இவர் ராமநாதபுரம் அருகே கழுகூரணி பஸ்நிறுத்தம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் முனியன்வலசையை சேர்ந்த லட்சுமணன் (40) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று லட்சுமணன் ஆட்டோவில் தனது நண்பரான முனியன்வலசையை சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜபிரபு(27) என்பரை ஏற்றிக்கொண்டு வந்த போது முருகவேலிடம் கொடுத்த பணத்தை கேட்டு தகராறு செய்தாராம். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த லட்சுமணன் மற்றும் ராஜபிரபு ஆகியோர் கத்தி மற்றும் பீர்பாட்டிலால் முருகவேலை குத்தி படுகாயப்படுத்தியதோடு அவரின் ஆட்டோவையும் சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த முருகவேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து லட்சுமணன் மற்றும் ராஜபிரபு ஆகியோரை கைது செய்தனர்.

Next Story