சேலத்தில் 3 பேர் கொலை: போலீசில் சிக்கிய திண்டுக்கல் வாலிபர்தான் கொலையாளி ஆய்வறிக்கையில் உறுதியானது


சேலத்தில் 3 பேர் கொலை: போலீசில் சிக்கிய திண்டுக்கல் வாலிபர்தான் கொலையாளி ஆய்வறிக்கையில் உறுதியானது
x
தினத்தந்தி 21 Feb 2020 11:15 PM GMT (Updated: 21 Feb 2020 9:00 PM GMT)

சேலத்தில் 3 பேரை கொன்ற வழக்கில், போலீசில் சிக்கிய திண்டுக்கல் வாலிபர் தான் கொலையாளி என்று ஆய்வறிக்கையில் உறுதியானது.

சேலம்,

சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பகுதியில் கடந்த 2-ந் தேதி வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டார். மறுநாளான 3-ந் தேதி சேலம் பழைய பஸ்நிலையம் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் தூங்கி கொண்டிருந்த பழ வியாபாரி அங்கமுத்து என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலைகள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில், இந்த கொலைகளுக்கு முன்னதாக கலெக்டர் அலுவலகம் அருகே முதியவர் ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். இதுவும் கொலையாக இருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

மேலும் கொலைகள் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை போன்ற வாலிபர் ஒருவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு போலீசாரிடம் சிக்கினார்.

21 வயதுடைய இந்த வாலிபருக்கு சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டமாகும். இவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கஞ்சா பழக்கமுடைய அவர் போலீசாரிடம், இந்த கொலைகளை நான் தான் செய்தேன் என்றும், பின்னர் இல்லை என்றும் முரண்பாடாக தெரிவித்தார்.

இருந்தாலும் அந்த வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், கொலை நடந்த போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும், பிடிபட்ட வாலிபரின் புகைப்படத்தையும் ஆய்விற்காக பெங்களூரு, சென்னை ஆகிய இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த ஆய்வின் போது இந்த கொலைகளை போலீசில் சிக்கிய வாலிபர் தான் செய்தார் என்பது உறுதியானதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான ஆய்வறிக்கை கிடைத்தவுடன் ெகாலையாளியான அந்த வாலிபர் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story