ஊராட்சிகளுக்கு உடனடியாக நிதி வழங்கவேண்டும்; ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்


ஊராட்சிகளுக்கு உடனடியாக நிதி வழங்கவேண்டும்; ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 22 Feb 2020 8:45 PM GMT (Updated: 22 Feb 2020 11:43 AM GMT)

மாநில அரசு ஊராட்சிகளுக்கு உடனடியாக நிதி வழங்க வேண்டும் என வந்தவாசி ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வந்தவாசி, 

வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு அமைப்பதற்கான கூட்டம்வந்தவாசி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை தாங்கினார். கூட்டமைப்பின் தலைவராக அமணம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.சுப்பராயன், செயலாளராக ஆராசூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.எ.பிரபு, பொருளாளராக கீழ்கொடுங்காலூர் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதாகுமார், துணை தலைவர்களாக ஊராட்சி மன்ற தலைவர்கள் கதீஜாமேத்தாரமேஷ் (மங்கலம்மாமண்டூர்), ஆர்.சிவராஜ் (கொட்டை) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

செயற்குழு உறுப்பினர்களாக கீழ்சீசமங்கலம் சுமலதா, பாதூர் பி.குமார், நெல்லியாங்குளம் ஜி.ராமு, கீழ்நர்மா எம்.ஜி.ரமேஷ், காரம் எம்.திருப்பதியான், இளங்காடு கவுரிபாண்டியன், அத்திப்பாக்கம் பி.கருணாகரன், மருதாடு செல்விவெங்கடேசன், கொவளை பி.ராஜா, மங்க நல்லூர் எம்.ராஜாராம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள் விவரம் பின்வருமாறு:–

100 நாள் வேலை திட்டத்தை ஏற்கனவே ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் வழங்கியது போன்று இனி வருங்காலங்களிலும் வழங்க வேண்டும். அரசியல் கட்சியினருக்கு இந்த பணியை ஒதுக்கக் கூடாது. மேலும் ஆன்லைன் பரிவர்த்தனை திட்டத்தை ரத்து செய்து விட்டு ஏற்கனவே இருந்தது போன்று தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் முடிந்து 50 நாட்கள் ஆகியும் ஊராட்சி நிர்வாகத்திற்கு நிதி வழங்காமல் உள்ளதை கண்டிப்பதுடன் உடனடியாக மாநில அரசு ஊராட்சிகளுக்கு நிதி வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 24–ந்தேதி வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வந்தவாசி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.நந்தகோபால் நன்றி கூறினார்.

Next Story