சேலம் அம்மாபேட்டையில் சிறப்பு முகாம்: ரூ.1¼ கோடி வரி வசூல்


சேலம் அம்மாபேட்டையில் சிறப்பு முகாம்: ரூ.1¼ கோடி வரி வசூல்
x
தினத்தந்தி 22 Feb 2020 11:00 PM GMT (Updated: 22 Feb 2020 7:24 PM GMT)

சேலம் அம்மாபேட்டையில் நடந்த சிறப்பு முகாமில் ரூ.1 கோடியே 35 லட்சத்து 33 ஆயிரம் வரி வசூலானது.

சேலம்,

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அம்மாபேட்டை மண்டலத்தில் அனைத்து வகையான வரி இனங்களை செலுத்துவதற்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தொடங்கி வைத்தார்.

முகாமில் புதிய கட்டிடத்துக்கான சொத்து வரி, காலிமனை வரி, குடிநீர் இணைப்பு, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டவர்கள் மீண்டும் இணைப்பு பெறுவதற்கும், பாதாள சாக்கடை வைப்பு தொகை, தொழில் வரி, கட்டிட வரைபட அனுமதி, அனுமதியற்ற மனைபிரிவுகளை முறைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.

வரி வசூல்

இதில், சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் பெயர் மாறுதலுக்காக விண்ணப்பித்த 15 பேர், புதிய குடிநீர் இணைப்பு வேண்டி விண்ணபித்த 12 பேர், புதிய சொத்து வரி செலுத்துவதற்காக விண்ணப்பித்த 22 பேர் என மொத்தம் 49 பேருக்கு விண்ணப்பித்த உடனேயே மனுக்களை பரிசீலனை செய்து உரிய ஆணைகளை ஆணையாளர் சதீஷ் வழங்கினார்.

இந்த சிறப்பு முகாமில் மொத்தம் 942 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ரூ.1 கோடியே 35 லட்சத்து 33 ஆயிரத்தை பொதுமக்கள் வரியாக செலுத்தினர். மேலும் தகுந்த ஆவணங்களுடன் பெறப்பட்ட விண்ணப்பங்களின் மீது பரிசீலனை செய்து 7 நாட்களுக்குள் உரிய ஆணைகளை வழங்கிடுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆணையாளர் உத்தரவிட்டார்.

முகாமில், உதவி ஆணையாளர்கள் கவிதா, விவேகானந்தன், உதவி செயற்பொறியாளர்கள் செந்தில்குமார், தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story