திருமணம் செய்து கொள்வதாக கூறி 2 பேரிடம் உல்லாசம்: பள்ளி பருவ காதலியை திருமணம் செய்த மறுநாளில் போலீஸ்காரர் கைது


திருமணம் செய்து கொள்வதாக கூறி 2 பேரிடம் உல்லாசம்: பள்ளி பருவ காதலியை திருமணம் செய்த மறுநாளில் போலீஸ்காரர் கைது
x
தினத்தந்தி 23 Feb 2020 12:30 AM GMT (Updated: 22 Feb 2020 7:48 PM GMT)

திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசம் அனுபவித்த போலீஸ்காரர், பள்ளி பருவத்தில் காதலித்த பெண்ணை திடீரென திருமணம் செய்து கொண்டார். மற்றொரு பெண் போலீஸ், தன்னை ஏமாற்றியதாக கொடுத்த புகாரின் பேரில் அவர் சிக்கினார்.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள காணை கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் மகள் ராஜலட்சுமி(வயது 26). இவர் கடந்த 2011-ம் ஆண்டு காணை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும்போது அவருக்கும், அவருடன் அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த கருங்காலிப்பட்டை சேர்ந்த ராமு மகன் சரத்குமார்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

இதனிடையே சரத்குமார் போலீஸ் வேலையில் சேர்ந்தார். தற்போது அவர் விழுப்புரம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் போலீஸ் வேலையில் சேர்ந்த பிறகும், இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததோடு தனிமையில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

உல்லாசம்

அப்போது ராஜலட்சுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி சரத்குமார் உல்லாசம் அனுபவித்தார். இந்த சூழலில் கடந்த சில வாரத்திற்கு முன்பு ராஜலட்சுமி, சரத்குமாரிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி கேட்டுள்ளார். அதற்கு அவர் திருமணம் செய்ய மறுத்து விட்டார்.

மேலும் சரத்குமாருடன் தற்போது விழுப்புரம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வரும் காணையை சேர்ந்த பிரியங்கா (27) என்பவர் ராஜலட்சுமியை செல்போனில் தொடர்பு கொண்டு, தான் சரத்குமாரை காதலிப்பதாகவும், இனிமேல் நீ அவருடன் பேசக்கூடாது என்றும் கொலை மிரட்டல் விடுத்தார்.

திருமணம்

இதனால் மனவேதனை அடைந்த ராஜலட்சுமி, இதுபற்றி விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் சரத்குமார், பிரியங்கா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் ராஜலட்சுமியை சரத்குமார், விழுப்புரம் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அழைத்துச்சென்று திருமணம் செய்து கொண்டார்.

பெண் போலீஸ் புகார்

இதை கேள்விப்பட்டதும் பிரியங்கா அதிர்ச்சியடைந்தார். உடனே இதுபற்றி அவர் விழுப்புரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரில், தான் கடந்த 2018-ம் ஆண்டில் விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை பிரிவில் பணியாற்றியபோது, அதே ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்த சரத்குமாரும், நானும் ஒருவரையொருவர் காதலித்து வந்தோம். அப்போது என்னிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி சரத்குமார் பலமுறை உல்லாசம் அனுபவித்தார். இதனால், நான் 4 முறை கர்ப்பமடைந்து சரத்குமாரின் வற்புறுத்தலின் பேரில் கருக்கலைப்பு செய்துள்ளேன்.

7 மாதம் கர்ப்பம்

தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில் சரத்குமார், என்னை ஏமாற்றி விட்டு ராஜலட்சுமியை திருமணம் செய்துள்ளார். இதை சரத்குமாரிடம் தட்டிக்கேட்டதற்கு என்னை சரத்குமாரும், விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வரும் கீதா என்பவரும் சேர்ந்து திட்டி காலால் உதைத்து கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே அவர்கள் 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன்பேரில் சரத்குமார், கீதா ஆகியோர் மீது மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ரேவதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சரத்குமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story