சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி டிரைவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா போராட்டம்


சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி டிரைவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 22 Feb 2020 11:30 PM GMT (Updated: 22 Feb 2020 9:18 PM GMT)

அணையில் மூழ்கி இறந்த டிரைவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை,

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் ஜீவா என்ற நாகேந்திரன் (வயது 32). டிரைவர். இவருடைய மனைவி சங்கீதா (28). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி ஜீவா என்கிற நாகேந்திரன் வழக்கம் போல் வீட்டில் இருந்து மோட்டார் சைக்களில் வேலைக்கு புறப்பட்டு சென்றார்.

அவர், சிறிது நேரம் கழித்து செல்போன் மூலம் சங்கீதாவை தொடர்பு கொண்டு உடுமலையை அடுத்த அமராவதி அணைக்கு, நண்பருடன் வந்திருப்பதாக கூறியுள்ளார்.

மாலையில் அவருடன் சென்ற நண்பர் மட்டும் திரும்பி வந்து உள்ளார். சங்கீதா அவரிடம் தனது கணவர் குறித்து கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியதாக கூறப்படுகிறது.

போலீசில் புகார்

இதனால் கவலை அடைந்த சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அமராவதி அணையில் தலை, கைகள் இல்லாத நிலையில் ஒரு ஆண் பிணம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று அமராவதி அணையில் கிடந்த உடலை மீட்டனர்.

அந்த உடலில் சங்கீதா என்று பச்சை குத்தப்பட்டு இருந்தது. போலீஸ் விசாரணையில், அணையில் பிணமாக கிடந்தது ஜீவா என்ற நாகேந்திரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக் காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தர்ணா போராட்டம்

இதைத்தொடர்ந்து கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு நாகேந்திரனின் மனைவி சங்கீதா மற்றும் உறவினர்கள் வந்தனர். அவர்கள், தலை மற்றும் 2 கைகளை வெட்டி நாகேந்திரனை கொலை செய்து அமராவதி ஆற்றில் வீசி உள்ளனர். அவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் அவரிடம் இருந்த பணத்தை காணவில்லை.

இதுகுறித்து அவரது நண்பரிடம் கேட்டால் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். இதனால் நாகேந்திரனின் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே அவரது நண்பரை பிடித்து விசாரணை நடத்தி, நாகேந்திரனின் சாவுக்கான காரணத்தை கண்டறிய வேண்டும். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறினார்கள். பின்னர் அவர்கள், அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து நாகேந்திரனின் மனைவி சங்கீதா மற்றும் உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மேலும், சம்பவம் நடைபெற்ற இடம் அமராவதி அணை பகுதி என்பதால் அமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story