மாநில பெண்கள் ஆக்கி போட்டி: ஈரோடு, திருவண்ணாமலை அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி


மாநில பெண்கள் ஆக்கி போட்டி: ஈரோடு, திருவண்ணாமலை அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 22 Feb 2020 11:30 PM GMT (Updated: 22 Feb 2020 9:54 PM GMT)

தேனியில் நடந்து வரும் மாநில அளவிலான பெண்கள் ஆக்கி போட்டியில் ஈரோடு, திருவண்ணாமலை மாவட்ட அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

தேனி,

தமிழ்நாடு ஆக்கி கழகம் சார்பில் 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான ஆக்கி போட்டி தேனி ஆயுதப்படை போலீஸ் கவாத்து மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த போட்டியில் மொத்தம் 16 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன.

இதில் 8 அணிகள் கால்இறுதி போட்டிகளுக்கு தகுதி பெற்றன. கால்இறுதி போட்டிகளில் வெற்றி பெற்ற ஈரோடு, திருவண்ணாமலை, சேலம், சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் அரைஇறுதி போட்டிக்கு தகுதிபெற்றன. இதையடுத்து அரைஇறுதி போட்டிகள் நேற்று நடந்தன.

இறுதிப்போட்டி

அரைஇறுதி போட்டியில் முதல் ஆட்டத்தில் திருவண்ணாமலை, சிவகங்கை அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் திருவண்ணாமலை அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் ஈரோடு, சேலம் அணிகள் மோதின. இதில் ஈரோடு அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இந்தநிலையில் இறுதிப்போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இறுதிப்போட்டியில் ஈரோடு, திருவண்ணாமலை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுக்கோப்பை வழங்கப்பட உள்ளது. போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு ஆக்கி கழக நிர்வாகிகள் மற்றும் தேனி மாவட்ட ஆக்கி கழக நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Next Story