பரங்கிப்பேட்டையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்


பரங்கிப்பேட்டையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 22 Feb 2020 10:30 PM GMT (Updated: 22 Feb 2020 10:07 PM GMT)

பரங்கிப்பேட்டையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரங்கிப்பேட்டை,

பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 3-வது வார்டில் மாதாகோவில் தெரு அமைந்துள்ளது. மிகவும் பின்தங்கிய பகுதியான இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்களது குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில் கடந்த 1970-ம் ஆண்டு மேல்நிலை குடிநீர் தொட்டி ஒன்று அங்கு கட்டி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் சுனாமி தாக்கியதற்கு பின்னர், இங்குள்ள நிலத்தடி நீரின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்ட குடிநீரும், உப்புநீராக மாறியது. இதையடுத்து 14-வது வார்டு பகுதியில் இருந்து மாதாகோவில் தெரு பகுதிக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இருப்பினும் இங்கிருந்து குறைந்த அளவு தண்ணீரே அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சரிவர குடிநீர் கிடைக்காமல் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் முறையிட்டும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

முற்றுகை

இதனால் ஆத்திரமடைந்த மாதாகோவில் தெரு மக்கள் சமூக ஆர்வலர் மாய பெருமாள் தலைமையில் அங்குள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்கள் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீரை ஏற்றி, தங்களுக்கான குடிநீரை வழங்கிட வேண்டும், சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், இனியும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்தக்கட்டமாக சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுப்போம் என்று கூறி, அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story