அரும்பாவூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா


அரும்பாவூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா
x
தினத்தந்தி 23 Feb 2020 10:30 PM GMT (Updated: 23 Feb 2020 6:31 PM GMT)

அரும்பாவூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா மற்றும் மயானக் கொள்ளை திருவிழா கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. இதில் குடியழைத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயானக் கொள்ளை நேற்று நடைபெற்றது. அப்போது மருளாளி வேடமிட்டவர்கள் ஆட்டின் குடலை உருவி மாலையாக போட்டுக்கொண்டு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து காளிவேடமிட்டவர்கள் முறத்தால் அடிக்கும் நிகழ்ச்சி மற்றும் நடனமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருமணத்தடை பட்டவர்கள், பயந்த நிலையில் உள்ளவர்கள் என பலர் கலந்து கொண்டு காளியிடம் முறத்தால் அடிவாங்கினர்.

திருமணமாகி...

தொடர்ந்து மயானத்தில் அரவான் உருவம் மீது அரிசி சாதம் கொட்டி அதில் ஆடு, கோழி பலியிட்டு ரத்தம் கலந்த சாதத்தை அள்ளி வீசினர். இந்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கலந்துகொண்டு மடியேந்தி வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதில் திருமணமாகி குழந்தை இல்லாத பெண்கள் மடியேந்தி சாதத்தை வாங்கி சாப்பிட்டனர். இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

5 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

இந்த திருவிழாவில் தொண்டமாந்துறையை சேர்ந்த அலெக்ஸ் என்பவரது மனைவி அந்தோணியம்மாள்(வயது 20) கலந்துகொண்டார். அப்போது கூட்டத்தில் இருந்த மர்மநபர் ஒருவர் அந்தோணியம்மாள் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டார். இதுதொடர்பாக அந்தோணியம்மாள் கொடுத்த புகாரின் பேரில், அரும்பாவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோலாகலமாக

முற்காலத்தில் கடும் கோபம் அடைந்த அங்காளபரமேஸ்வரி அம்மன், உலகில் உள்ள உயிர்களை பலி கொண்டு, ஆக்ரோஷத்தில் இருந்தார். அப்போது அங்காளபரமேஸ்வரியின் கோபத்தை சாந்தப்படுத்த, சிவன் ருத்ர நடனமாடி, அம்மனை சங்கலியால் கட்டி போட்டார்.

அம்மனின் அடங்காத கோபத்தை கட்டுப்படுத்திய சிவன், ஆண்டுதோறும், மகாசிவராத்திரி விழாவுக்கு அடுத்து வரும் அமாவாசை தினத்தில், அம்மனின் கட்டு அவிழ்க்கப்பட்டு, உயிர் பலி வாங்க அனுமதி அளித்தார். இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக, மாசி மாத அமாவாசை தினத்தில், மயான கொள்ளை விழாவை பொதுமக்கள் கோலாகலமாக நடத்தி வருகின்றனர்.

நடனமாடியபடி...

அதன்படி சிறுகுடல் கிராமத்திலுள்ள அங்காளம்மன் கோவிலில் ஆண்டுதோறும், மாசி மாத அமாவாசை தினத்தில், மயான கொள்ளை விழா, கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் மாசி மாத அமாவாசை தினமான நேற்று சிறுகுடல் கிராமத்திலுள்ள அங்காளம்மன், பெரியண்ணன், முனியப்பன், கருப்பண்ணன் சாமி உள்ளிட்ட காவல் தெய்வங்களை சிறப்பிக்கும் வகையில், அவர்களை போல, பக்தர்கள் சாமி வேடமணிந்து, வண்ணங்களை முகத்தில் பூசி, மயில் தோகையை கட்டி, நடனமாடியபடி, சுடுகாடு நோக்கி சென்று, நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது காளி வேடமிட்டவர்களிடமிருந்து குழந்தைபேறு இல்லாத பெண்களும், பேய் பிடித்தவர்களும் முறத்தால் அடி வாங்கினர். அவ்வாறு முறத்தால் அடி வாங்கினால் பேய் பயத்திலிருந்து விடுபடுவர் என்பது நம்பிக்கை. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான கொள்ளை நடைபெற்றது.

நேர்த்திக்கடன்

இதைதொடர்ந்து மயானத்திலிருந்து காளிவேடமிட்டவர்கள் ஊர்வலமாக கோவில் நோக்கி சென்றனர். அப்போது காளியிடம் பக்தர்கள் ஆடு, கோழிகளை நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் ஆடு, கோழிகளின் ரத்தத்தை மருளாளி உறிஞ்சி குடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் மாலை அங்காளம்மன், பத்ரகாளியம்மனுக்கு கோவிலில் பொங்கல் வைத்து மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.

Next Story