குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி தஞ்சையில் 9-வது நாளாக முஸ்லிம்கள் காத்திருப்பு போராட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி தஞ்சையில் 9-வது நாளாக முஸ்லிம்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 24 Feb 2020 12:00 AM GMT (Updated: 23 Feb 2020 8:33 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி தஞ்சையில் முஸ்லிம்கள் 9-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கீழவாசலில் உள்ள அத்தர் மஹலா பள்ளி வாசல் அருகே முஸ்லிம்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 15-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 9-வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது.

மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும். பிற மாநிலங்கள் போன்று இந்த சட்டத்தை தமிழக அரசு தமிழகத்தில் அனுமதிக்க கூடாது. இதற்காக தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமைப்பதிவேடு ஆகிய சட்ட திருத்தங்களையும் தமிழகத்தில் அனுமதிக்ககூடாது என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.

விசிறி மூலம் எதிர்ப்பு

போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள், ஆண்கள் ஈடுபட்டு, பள்ளிவாசலில் உணவு சமைத்து சாப்பிட்டு போராட்டம் நடைபெறும் இடத்திலேயே இரவு பகலாக காத்திருந்து வருகின்றனர். நேற்று குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு வேண்டாம் என தங்கள் எதிர்ப்பை விசிறி மூலம் தெரிவிக்கும் வகையில் காட்டியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் அப்துல்லா கூறுகையில், “இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகிய சட்டங்களை திரும்ப பெற வேண்டும். இந்த சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது. இந்த அறிவிப்பை தமிழக முதல்வர் அறிவிக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். அதுவரை நாங்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். வருகிற 26-ந் தேதி தஞ்சைக்கு தமிழக முதல்-அமைச்சர் வருகை தர உள்ளார். அப்போது அவருக்கு எதிரான எங்களது போராட்டம் அவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும்” என்றார்.

Next Story