திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்


திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
x
தினத்தந்தி 23 Feb 2020 10:30 PM GMT (Updated: 23 Feb 2020 9:04 PM GMT)

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூரில் மிகவும் புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழாவுடன் கூடிய மாசி தேரோட்டம் காப்புகட்டுதலுடன் தொடங்கி நடைபெறுவது வழக்கம். வழக்கம்போல் இந்த ஆண்டும் மாசி தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை கோவிலில் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

இதையொட்டி புதுக்கோட்டை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கடந்த சில நாட்களாக விரதம் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து, சிறப்பு வழிபாடு நடத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். இதேபோல திரளான பக்தர்கள் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும், குழந்தைகள் இல்லாமல் இருந்து குழந்தை பிறந்த தம்பதிகள் கரும்பில் தொட்டில் கட்டி தங்களது குழந்தையை கோவிலுக்கு மேள தாளங்கள், வாண வேடிக்கைகள் முழங்க, ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

சிறப்பு வழிபாடு

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை நகரில் பல்வேறு பகுதிகளில் நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு, கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த ஊர்வலமாக செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் உள்ளிட்ட பானங்கள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து நேற்று இரவு புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் தங்கள் பகுதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பூக்களை கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் இரவு கொட்டி சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலையில் பூ பிரிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

9-ந் தேதி தேரோட்டம்

இதைத்தொடர்ந்து வருகிற மார்ச் மாதம் 1-ந் தேதி இரவு மாசி தேரோட்டம் காப்புகட்டுதலுடன் தொடங்க உள்ளது. இதைத்தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் முத்துமாரியம்மன் வீதிஉலா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 9-ந் தேதி மாலை 4.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்க உள்ளனர். மாசி தேரோட்ட திருவிழா வருகிற 17-ந் தேதி யுடன் நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Next Story