அவினாசி அருகே, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து 2 வாலிபர்கள் சாவு


அவினாசி அருகே, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து 2 வாலிபர்கள் சாவு
x
தினத்தந்தி 23 Feb 2020 10:15 PM GMT (Updated: 24 Feb 2020 12:25 AM GMT)

அவினாசி அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அவினாசி, 

சேலம் மாவட்டம் கூட்டாத்துப்பட்டி பிரிவு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சதீஸ்குமார் (வயது 21). அதே பகுதியை சேர்ந்த மணி என்பவரது மகன் தினேஷ் (22). நண்பர்களான இவர்கள் இருவரும் அவினாசியை அடுத்து துலுக்கமுத்தூரில் தங்கி அப்பகுதியில் உள்ள ஒரு பால் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் நடுவச்சேரியிலிருந்து அவினாசி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை தினேஷ் ஓட்டினார். பின் இருக்கையில் சதீஸ்குமார் இருந்தார். அவினாசியை அடுத்து சின்னேரிபாளையம் பிரிவு அருகே வந்தபோது வேகத்தடை இருப்பதை கவனிக்காமல் மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்த இருவருக்கும் தலை மற்றும் கை,கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி சதீஸ்குமார் உயிரிழந்தார்.

மேல் சிகிச்சைக்காக தினேஷ் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.விபத்து குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story