திருவாரூர் மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் சாக்கு தட்டுப்பாடு: நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்துக்கிடக்கும் அவலம்


திருவாரூர் மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் சாக்கு தட்டுப்பாடு: நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்துக்கிடக்கும் அவலம்
x
தினத்தந்தி 25 Feb 2020 11:15 PM GMT (Updated: 25 Feb 2020 5:42 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் சாக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்துக்கிடக்கின்றனர். அதை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 49 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் அறுவடை பணிகள் தொடங்கிய நிலையில் அறுவடை எந்திரங்கள் பற்றாக்குறையினால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் நெற்பயிர்கள் சாய்ந்து முளைக்க தொடங்கின. இதனால் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து கூடுதலான வாடகையில் தனியார் அறுவடை எந்திரங்களை கொண்டு அறுவடை பணிகளை மேற்கொண்டனர். அறுவடை செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனர். நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளியில் செயல்படுவதாலும், போதிய இடவசதி இல்லாததாலும் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் சிரமங்கள் நிலவி வருகிறது.

சாக்கு தட்டுப்பாடு

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு தட்டுப்பாடு, லாரி பிரச்சினை போன்ற பல காரணங்களால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. இதனை கிடங்கிற்கு நகர்வு செய்யும் பணி மந்தமாக நடைபெறுகிறது. இதனால் அறுவடை செய்து நெல்லை விற்பனை செய்ய முடியாமல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சம்பா அறுடை நேரத்தில் திடீர் மழை, அறுவடை எந்திரங்கள் பற்றாக்குறை போன்ற பல இன்னல்களுக்கு விவசாயிகள் ஆளாகினர். கூடுதல் வாடகை கொடுத்து அறுவடை செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உடனடியாக விற்பனை செய்ய முடியாமல் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. சாக்கு தட்டுப்பாடு, லாரி பிரச்சினை போன்றவற்றால் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கின்றன.

வாக்குவாதம்

கொள்முதல் நிலையத்தில் 15 நாட்களுக்கு மேல் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பனி பொழிவு காரணமாக நெல்லின் ஈரப்பதம் அதிகரிக்கும் நிலையும் உள்ளது. கொள்முதல் செய்யாததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் விவசாயிகளுக்கும், நெல் கொள்முதல் ஊழியர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விவசாயிகளிடம் இருந்து தடையின்றி நெல்லை கொள்முதல் செய்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து நெல் கொள்முதல் நிலைய அதிகாரி கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் தேவைக்கு ஏற்ப நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதுவரை 3 லட்சத்து 21 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. சாக்கு தட்டுப்பாடு இன்றி வழங்கிடவும், நெல்லை கொள்முதல் நிலையத்தில் இருந்து கிடங்கிற்கு நகர்வு செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

Next Story