மதுரை அருகே பயங்கரம்: நடத்தையில் சந்தேகப்பட்டு இளம்பெண் குத்திக்கொலை - கணவர் கைது


மதுரை அருகே பயங்கரம்: நடத்தையில் சந்தேகப்பட்டு இளம்பெண் குத்திக்கொலை - கணவர் கைது
x
தினத்தந்தி 25 Feb 2020 10:00 PM GMT (Updated: 25 Feb 2020 9:19 PM GMT)

நடத்தையில் சந்தேகம் காரணமாக இளம்பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மதுரை,

மதுரை மாவட்டம் புளியங்குளம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். சென்டிரிங் தொழிலாளி. அவருடைய மனைவி உமாமகேஸ்வரி(வயது 32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் கண்ணன் சந்தேகப்பட்டதாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று மாலையும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து உமாமகேஸ்வரியை சரமாரியாக குத்தியதாக தெரிகிறது. இதில் அவரது அலறல் கேட்டு பக்கத்து வீட்டினர் ஓடிவந்தனர். அதற்குள் கண்ணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த உமாமகேஸ்வரியை சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவில் உமாமகேஸ்வரி பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சிலைமான் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story