குளச்சலில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் மாணவர் இயக்கங்கள் சார்பில் நடந்தது


குளச்சலில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் மாணவர் இயக்கங்கள் சார்பில் நடந்தது
x
தினத்தந்தி 25 Feb 2020 11:30 PM GMT (Updated: 25 Feb 2020 11:07 PM GMT)

குளச்சல் மற்றும் அழகியமண்டபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி, மாணவர்கள் இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

குளச்சல்,

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டக்காரர்கள் மீது நடத்திய தடியடியை கண்டித்தும் குமரி மாவட்ட அனைத்து மாணவர் இயக்கங்கள் சார்பில் குளச்சல் காமராஜர் பஸ் நிலையத்தில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.

சமூக நீதி மாணவர் இயக்க மாவட்ட செயலாளர் பைரோஸ் காஜா தலைமை வகித்தார். கேம்பஸ் பிராண்ட் ஆப் இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமீர் சுஹைல், மாவட்ட மாணவர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆல்பர்ட், மாவட்ட தி.மு.க. மாணவர் அணி அமைப்பாளர் சதாசிவன், நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சகிம்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கேம்பஸ் பிராண்ட் ஆப் இந்தியா நியாஸ் வரவேற்று பேசினார். மாநில பொதுச்செயலாளர் முகம்மது அஷ்ரப், சமூக நீதி மாணவர் இயக்கம் மாநில துணை செயலாளர் சுல்பீக்கர், ஆஷிப் ஹூசைன் ஆகியோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அழகியமண்டபம்

இதேபோல் அனைத்து மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில், குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், டெல்லி கலவரத்தை கண்டித்தும் அழகியமண்டபம் சந்திப்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆல்பர்ட் தலைமை தாங்கினார். இதில் மாணவர் அமைப்பை சேர்ந்த மிக்கேல்ராஜ், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமீர் மற்றும் ஜீவா, ஜோன், ராபர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சுல்பீக்கர் சிறப்புரையாற்றினார்.

கண்டனம்

டெல்லியில் அமைதியான முறையில் போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, த.மு.மு.க. தலைமையில் குளச்சல் அண்ணாசிலை முன் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர த.மு.மு.க. தலைவர் ஷாகுல் அமீது தலைமை தாங்கினார். ஜமாத் தலைவர் பஷீர் கோயா, காங்கிரஸ் கட்சி மாநில சிறுபான்மை பிரிவு துணை தலைவர் யூசுப்கான், எஸ்.டி.பி.ஐ. நகர தலைவர் நிஷார், முஸ்லிம் லீக் மாவட்ட பொருளாளர் சுபேர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் த.மு.மு.க. மாவட்ட தலைவர் அன்வர் ஹுசைன், ஹபீப் பிர்தவுசி, இஸ்லாமிய கலாசார கழக சவுக்கத் அலி உஸ்மானி, பச்சை தமிழகம் நிறுவன தலைவர் சுப.உதயகுமார், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் அன்வர்சாதத் ஆகியோர் பேசினார்கள். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story