தஞ்சையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் 16 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்


தஞ்சையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் 16 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 Feb 2020 11:30 PM GMT (Updated: 27 Feb 2020 7:18 PM GMT)

தஞ்சையில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு நேற்றுமதியம் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச் செயலாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு என்ற பெயரில் பணியாளர்களை பணி நீக்கம் செய்து பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும். நெல் கொள்முதல் பணிக்கு தேவையான களப்பணியாளர்களை வழங்காமல் கூடுதல் பணிச்சுமை வழங்கி பணியாளர்களுக்கு மேலும் மனஉளைச்சலை ஏற்படுத்தி பணியில் இருந்து விடுவிப்பதை நிறுத்த வேண்டும்.

ஓய்வூதியம்

சுமைதூக்கும் தொழிலாளிகளுக்கு தினசரி கூலியை வழங்க வேண்டும். நீண்டகாலமாக பணிபுரியும் தொழிலாளர்கள் வயது முரண்பாடு பார்க்காமல் அனைவரையும் நிபந்தனை ஏதுமின்றி தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும். நெல் கொள்முதல் பணியாளர்களின் கோரிக்கைகளை உதாசீனப்படுத்தாமல் தொழிற்சங்கங்களை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும்.

உதவியாளர் மற்றும் உதவி மேலாளர் உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் நேரடி நியமனத்தை கைவிட வேண்டும். பணி ஓய்வு பெற்ற நிரந்தர பணியாளர்களுக்கு உடனடியாக குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பின்னர் வாயிற்கூட்டம் நடைபெற்றது. இதில் தொ.மு.ச. பொதுச் செயலாளர் வள்ளுவன், ஐ.என்.டி.யூ.சி. பொதுச் செயலாளர் இளவரி, சி.ஐ.டி.யூ. பொதுச் செயலாளர் புவனேஸ்வரன், அம்பேத்கர் பணியாளர் சங்க பொதுச் செயலாளர் ராஜமாணிக்கம், பாட்டாளி தொழிற்சங்க மாநில தலைவர் கிரு‌‌ஷ்ணராஜ், ஏ.ஐ.சி.சி.டி.யூ. பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

கூட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாவட்ட துணைச் செயலாளர் துரை.மதிவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story