நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்றுத்தரக்கோரி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை


நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்றுத்தரக்கோரி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 28 Feb 2020 12:00 AM GMT (Updated: 27 Feb 2020 8:46 PM GMT)

சேலத்தில் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்றுத்தரக்கோரி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது, பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர், புதிய பஸ் நிலையம் அருகில் வின் ஸ்டார் இந்தியா என்ற பெயரில் ரியல் எஸ்டேட் மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதற்கு இரட்டிப்பு தொகை வழங்கப்படும் என்று அறிவிப்புகளை வெளியிட்டார். இதனை நம்பி ஏராளமான மக்கள் அவரது நிறுவனத்தில் பலகோடி ரூபாய் முதலீடு செய்தனர்.

ஆனால் கால அவகாசம் முடிந்தும் வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் சிவக்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவர் ஜாமீனில் வெளியே உள்ளார்.

இந்தநிலையில், சிவக்குமார் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று காலை சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும், அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, அங்கிருந்த போலீசாரிடம், சிவக்குமார் மீது நடவடிக்கை எடுத்து முதலீடு செய்த பணத்தை திருப்பி தர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

தீக்குளிக்க முயற்சி

இது குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறுகையில், சிவக்குமார் நடத்தி வந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை என ரூ.400 கோடிக்கு மேல் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளனர். ஆனால் இதுவரை பணத்தை திரும்பி வழங்கவில்லை. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1,500 பேரிடம் தான் போலீசார் புகார் மனுக்களை வாங்கியுள்ளனர். மீதம் உள்ளவர்களிடம் புகார் மனுக்களை வாங்கி கொண்டு சிவக்குமாரை மீண்டும் கைது செய்து எங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும், என்றனர்.

அப்போது, அந்த கூட்டத்தில் இருந்த பள்ளப்பட்டியை சேர்ந்த கோமதி என்ற பெண் திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தினர்.

இது ஒருபுறம் இருக்க, கோகிலா என்ற பெண் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர்கள் இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவலறிந்த சூரமங்கலம் போலீசார் அங்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அப்போது, அங்கிருந்தவர்களிடம் சிவக்குமார் மீது யார், யார், புகார் மனுக்களை அளிக்க விருப்பம் உள்ளதோ, அவர்கள் புகார் மனு அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவர்களிடம் போலீசார் புகார் மனுக்களை பெற்றுக்கொண்டு வீடுகளுக்கு செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.

Next Story