டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று மோடி, அமித்ஷா பதவி விலக வேண்டும் தொல். திருமாவளவன் பேட்டி


டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று மோடி, அமித்ஷா பதவி விலக வேண்டும் தொல். திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 28 Feb 2020 12:30 AM GMT (Updated: 27 Feb 2020 9:44 PM GMT)

டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று மோடி, அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று நாகர்கோவிலில் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.

நாகர்கோவில்,

திட்டுவிளையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. குமரி மாவட்டத்துக்கு வந்தார். பின்னர் நாகர்கோவிலில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெல்லியில் நடந்த வன்முறை பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. டெல்லி வன்முறை தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயக சக்தியாக தன்னை காட்டிக்கொள்ளும் யாரும், பா.ஜனதாவில் இருந்தாலும் கூட கண்டித்து தான் ஆக வேண்டும் என்ற நெருக்கடி தற்போது ஏற்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் ரஜினிகாந்த் கண்டனத்தை பதிவிட்டு உள்ளார்.

சென்னையில் போராட்டம்

கடந்த சில நாட்களாக டெல்லியில் நடைபெற்று வரும் வன்முறை திட்டமிட்டு நடத்தப்படும் மதவெறியாட்டம். இது ஒரு ஒத்திகையாகத் தான் கருதுகிறேன். இந்தியா முழுவதும் இத்தகைய வன்முறை நடக்க வாய்ப்பு உள்ளது. மதவெறி கும்பல்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீதியில் வந்து போராட்டக்காரர்கள் மீது தாக்குகிறார்கள்.

இத்தகைய போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. வன்முறை சம்பவத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும். டெல்லியில் நடந்த வன்முறை தொடர்பாக நீதி விசாரணை கேட்டு, 29-ந் தேதி(அதாவது நாளை) சென்னையில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.

அரசியல் தலையீடு

டெல்லி காவல்துறை யூனியன் பிரதேச அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. வன்முறையில் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில் காவல்துறை வழக்கு பதிவு செய்யவில்லை என்பதன் மூலம் அரசியல் தலையீடு இருப்பது உறுதியாகி உள்ளது.

இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.

பொதுக்கூட்டம்

இதனை தொடர்ந்து திட்டுவிளையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்பது தான் சங்க் பரிவார்களின் எண்ணம். அதன்படி தான் மத்திய அரசின் ஆட்சியும் நடந்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லிம்கள் மட்டும் அல்ல, அனைவரும் பாதிக்கப்படுவார்கள். இது தெரியாமல் சிலர் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.

டெல்லி வன்முறைக்கு பா.ஜனதாவும், சங்க் பரிவாரும் தான் காரணம். குடியுரிமை திருத்த சட்ட மசோதா நிறைவேறியதற்கு தமிழகத்தை சேர்ந்த அ.தி.மு.க. எம்.பி.க்கள் தான் காரணம். அவர்கள் எதிராக வாக்களித்திருந்தால், குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேறி இருக்காது என்று தெரிவித்தார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த பொதுக்கூட்டத்துக்கு சமீர் தலைமை தாங்கினார். முகமது ராபி வரவேற்றார். ஆஸ்டின் எம்.எல்.ஏ., திட்டுவிளை ஜூம்மா பள்ளி நிர்வாக தலைவர் மைதின் பிள்ளை, குமரி மாவட்ட ஜமாத் கூட்டமைப்பு செயலாளர் எம்.ஏ.கான், தலைவர் அப்துல் லத்தீப், மதபோதகர்கள் ராஜ்குமார், மரியதாஸ், பன்னீர்செல்வம் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, எஸ்.டி.பி.ஐ. மாநில பேச்சாளர் முகமது ஹூசைன், சுந்தரவள்ளி ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் முகமது சர்ஜூன் நன்றி கூறினார்.


Next Story