சேலம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண் கைது திடுக்கிடும் தகவல்கள்


சேலம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண் கைது திடுக்கிடும் தகவல்கள்
x
தினத்தந்தி 28 Feb 2020 10:45 PM GMT (Updated: 28 Feb 2020 8:25 PM GMT)

சேலம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவருடைய மனைவியே கொன்று விட்டு நாடகம் ஆடியது தெரியவந்துள்ளது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

மேச்சேரி,

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே சித்தூர் ஒடுவாப்பட்டி திம்மதியான் வளவை சேர்ந்தவர் படவெட்டி (வயது 40). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவருக்கும் ஜலகண்டாபுரம் அருகே ஆவடத்தூர் ஊராட்சி சவுரியூர் ராஜாகோவில் எல்லைக்காட்டுவளவு பகுதியை சேர்ந்த செங்கோடன்-மினிச்சி ஆகியோரது மகள் நளாவுக்கும் (37) 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

கடந்த 27-ந்தேதி காலை அந்த பகுதியை சேர்ந்தவர்கள், படவெட்டியின் அண்ணன் வெள்ளையனுக்கு போன் செய்து படவெட்டி இறந்து கிடப்பதாக தெரிவித்தனர். இதுபற்றி ஜலகண்டாபுரம் போலீசாருக்கும் தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது தலையில் கல்லால் தாக்கப்பட்டு படவெட்டி இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுபற்றி படவெட்டியின் மகளிடம் விசாரணை நடத்தினர். மகள் பிளஸ்-1 படித்து வருகிறார். அப்போது அந்த மாணவி போலீசாரிடம், எனது தந்தைக்கு குடிப்பழக்கம் உண்டு. எனக்கு தொல்லை கொடுத்து வந்தார். இதேபோல் 26-ந்தேதி இரவு நான் வீட்டில் இருந்தபோது குடிபோதையில் இருந்த எனது தந்தை எனக்கு தொல்லை கொடுத்தார். நான் எனது தந்தையை பிடித்து தள்ளினேன். பின்னர் அவருடைய தலையில் அம்மிக்கல்லை போட்டேன். இதில் அவர் இறந்து விட்டார், என்று கூறியுள்ளார்.

ஆனால் போலீசாருக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டது. எனவே அந்த மாணவியிடம் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த மாணவி முன்னுக்கு பின் முரணாக கூறினார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியபோது படவெட்டி கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. நளாவும், அதே ஊரைச் சேர்ந்த நெசவு தொழிலாளி ரங்கசாமி (25) என்பவரும் சேர்ந்து படவெட்டியை கொலை செய்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

நளாவின் அக்காள் சரஸ்வதியின் மகளை நெசவு தொழிலாளி ரங்கசாமி திருமணம் செய்துள்ளார். இந்தநிலையில் ரங்கசாமிக்கும், நளாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நளா கணவரை பிரிந்து கடந்த 5 ஆண்டுகளாக ராஜாகோவில் வளவில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த 3 வாரங்களுக்கு முன்பு நளா குடும்பத்தினர் படவெட்டியிடம் பேசினர். கணவரை பிரிந்து நளா வாழ்வது சரியல்ல, எனவே அவர் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும், என்று கூறியுள்ளனர். இதற்கு படவெட்டி சம்மதித்து மாமனார் வீட்டில் இருந்த நளாவுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இதன் காரணமாக ரங்கசாமியை நளா சந்திக்க முடியாமல் தவித்தார். எனவே கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் கணவரை தீர்த்து கட்ட நளா முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 26-ந்தேதி படவெட்டி வீட்டில் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது ரங்கசாமியும், நளாவும் சேர்ந்து அம்மிக்கல்லை தூக்கி படவெட்டி தலை மீது போட்டு உள்ளனர். இதில் படவெட்டி துடிதுடித்து இறந்துள்ளார்.

இந்த கொலை வழக்கில் இருந்து தப்பிக்க ரங்கசாமியும், நளாவும் திட்டம் தீட்டினர். இதற்காக நளாவின் மகளை மூளைச்சலவை செய்து, தனது தந்தையை கொலை செய்ததாக கூற வைத்துள்ளனர். நீ கொலை செய்ததாக கூறினால் உனக்கு தண்டனை கிடைக்காது, என கூறியுள்ளனர். இதனால் அந்த மாணவியும் தாய் கூறியதை ஏற்று போலீசாரிடம், தந்தையை கொலை செய்ததாக கூறி நாடகமாடி உள்ளார். ஆனால் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை நளா கொலை செய்த கொடூர சம்பவம் அம்பலம் ஆகி உள்ளது. இதையடுத்து ரங்கசாமியையும், நளாவையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story