சிங்கப்பூரில் இருந்து கடத்தல்: மதுரை விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல் - ராமநாதபுரத்தை சேர்ந்த பெண் கைது


சிங்கப்பூரில் இருந்து கடத்தல்: மதுரை விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல் - ராமநாதபுரத்தை சேர்ந்த பெண் கைது
x
தினத்தந்தி 28 Feb 2020 10:00 PM GMT (Updated: 28 Feb 2020 11:49 PM GMT)

சிங்கப்பூரில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தி வந்த பெண்ணை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

மதுரை,

சிங்கப்பூரில் இருந்து மதுரை வரும் விமானத்தில் கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக மதுரை சுங்கப் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் உஷாரான அதிகாரிகள், சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை தீவிரமாக சோதனையிட்டனர்.

சுங்க புலனாய்வுத்துறை துணை கமிஷனர் ஜெய்சன் பிரவீன்குமார், தலைமையிலான அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர். அப்போது, அந்த விமானத்தில் வந்த, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதைதொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதுபோல், அவரது உடைமைகளையும் தனி அறையில் வைத்து சோதனை செய்தனர். அப்போது அவர் தனது ஆடையில் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்ததால், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த பெண்ணை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து துணை கமிஷனர் ஜெய்சன் பிரவீன்குமார் கூறும்போது, " அந்த பெண்ணிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் 932 கிராம் எடை இருந்தது. அதன் மதிப்பு ரூ.39 லட்சத்து 85 ஆயிரத்து 232 ஆகும்.

கடந்த 2019 ஆண்டு முதல் தற்போது வரை மதுரை சுங்க புலனாய்வுத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 9933 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.3 கோடியே 75 லட்சத்து 52 ஆயிரம் ஆகும். மேலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக 26 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்றார்.

Next Story