வேலூர் மண்டலத்தை பிரித்து காஞ்சீபுரத்தில் அறநிலையத்துறை அலுவலகம் அமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை


வேலூர் மண்டலத்தை பிரித்து காஞ்சீபுரத்தில் அறநிலையத்துறை அலுவலகம் அமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 3 March 2020 10:00 PM GMT (Updated: 3 March 2020 9:32 PM GMT)

வேலூர் மண்டலத்தை பிரித்து காஞ்சீபுரத்தில் அறநிலையத்துறை அலுவலகம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சீபுரம்,

தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்கள் மற்றும் அவற்றின் அசையும், அசையா சொத்துகளை பராமரிக்கும் பணிகளை அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக விழுப்புரம், சென்னை, வேலூர், நெல்லை உள்ளிட்ட 11 மண்டலங்களையும் மாவட்ட அளவில் 28 கோட்டங்களையும் ஏற்படுத்தி ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஓர் இணை ஆணையர், ஒவ்வொரு கோட்டத்துக்கும் ஓர் உதவி ஆணையர் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கோவில்களின் நிர்வாக பணிகள் வேலூர் மண்டலத்தின் கட்டுப்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்கண்ட 3 மாவட்டங்களில் உள்ள 3200 கோவில்களின் பல்வேறு நிர்வாக பணிகள், ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ள கோவில் சொத்துகளை மீட்பது, நீதிமன்ற வழக்கு தொடர்பான கோப்புகள், கும்பாபிஷேக பணிகளுக்கான நிர்வாக ஒப்புதல்களை பெறுவதற்கு, 150 கி.மீ தொலைவில் உள்ள வேலூர் மண்டல இணை ஆணையர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டியுள்ளது.

மேலும், முக்கிய ஒப்புதல்களை பெற செல்லும் அலுவலர்கள் சில நேரங்களில் விடுதியில் அறை எடுத்து அங்கேயே தங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால், கோவில்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், காஞ்சீபுரம் மற்றும் வேலூர் துறையின் வேலூர் மாவட்டங்களை பிரித்து செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதன் மூலம், அறநிலையத்துறையின் வேலூர் மண்டலத்தின் கீழ் திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்கள் செயல்படும் நிலை உள்ளது.

இதனால், கோவில்களின் நிர்வாக பணிகள் மற்றும் சொத்துகளை எளிதில் பராமரிக்கும் வகையில், கோவில் நகரமாக விளங்கும் காஞ்சீபுரத்தில் மண்டல அலுவலகத்தை அமைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து காஞ்சீபுரம் மக்கள் கூறும்போது:-

காஞ்சீபுரத்தில் உலக புகழ்பெற்ற அத்திவரதரை கொண்டுள்ள வரதராஜ பெருமாள் கோவில், சக்தி பீடங்களில் ஒன்றான காமாட்சியம்மன், பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான ஏகாம்பரநாதர் மற்றும் திருமாலின் 18 திவ்ய தேசங்கள், பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட கைலாசநாதர், வைகுண்ட பெருமாள் மற்றும் சித்ரகுப்தர் கோவில் உள்பட பல்வேறு பிரசித்தி பெற்ற புராதன கோவில்கள் உள்ளன.

கோவில்களில் உள்ள சுவாமி சிலைகள், மண்டபங்கள் மற்றும் சொத்துகளின் பராமரிப்பு பணிகளுக்கான பல்வேறு நிர்வாக ஒப்புதல்களை பெறுவதில் தாமதம் ஏற்படுவதால், வேலூர் மண்டலத்தை பிரித்து செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அலுவலகத்தை காஞ்சீபுரத்தில் அமைக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், அறநிலையத்துறையின் வேலூர் மண்டலம் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களை உள்ளடக்கியதாக உள்ளது.

தற்போது காஞ்சீபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், காஞ்சீபுரம் மண்டலத்தை புதியதாக உருவாக்கி திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்ட கோவில்களை அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம்.

இதுதொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Next Story