மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா


மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா
x
தினத்தந்தி 4 March 2020 10:30 PM GMT (Updated: 4 March 2020 9:00 PM GMT)

மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா நடந்தது.

கீரமங்கலம்,

கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா 15 நாட்களுக்கு முன்பு காப்புக்கட்டுதல், முளைப்பாரிக்கு விதை பாவுதலுடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு கிராம பொது மக்களால் நடத்தப்பட்ட முளைப்பாரித் திருவிழா கடந்த வாரம் நடந்தது. திருவிழாவில் கலந்து கொண்ட பெண்கள் நவதானிய விதைகள் தூவி துளிர் விட்டுள்ள இளம் பயிர்களை அலங் கரித்து தூக்கி சென்று மண்ணடி திடலில் இருந்து ஊர்வலமாக சென்று குளத்தில் கொட்டிச் சென்றனர். தொடர்ந்து குதிரை எடுப்பு திருவிழா மற்றும் பாட்ட கோவில் கல் பொங்கல் திருவிழாவும் நடந்தது.

மது எடுப்பு திருவிழா

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மது எடுப்பு திருவிழா கிராம பொதுமக்களால் நேற்று நடத்தப்பட்டது. மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு கிராம மக்கள் குடத்தில் நெல் நிரப்பி அதில், தென்னம் பாலைகளை குடங்களில் அலங்கரித்து தாரை தப்பட்டைகள் முழங்க வாணவேடிக்கைகளுடன் கும்மியாட்டத்துடன் ஊர்வலமாக மண்ணடி திடல் சென்று, அங்கிருந்து காவிரி ஆற்றங்கரை வழியாக வீரமாகாளியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக தூக்கி வந்தனர். பின்னர் கோவிலை சுற்றி வந்து அருகில் பாலைகளையும், குடத்தில் கொண்டு வந்த நெல்லையும் கொட்டிவிட்டு சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் கிராம பொது மக்கள், விழாக்குழு மற்றும் உபயதாரர்களால் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரமங்கலம் போலீசாரும் செய்திருந்தனர்.

Next Story