நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு; ஆராய்ச்சி நிலையம் தகவல்


நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு; ஆராய்ச்சி நிலையம் தகவல்
x
தினத்தந்தி 6 March 2020 10:00 PM GMT (Updated: 6 March 2020 9:24 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்து உள்ளது.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று 4 மி.மீட்டர் அளவிலும், நாளை 1 மி.மீட்டர் அளவிலும் மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மற்றும் 10-ந் தேதி தெளிவான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. இன்று முதல் 4 நாட்களுக்கு காற்று மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் வீசும்.

இன்று தெற்கு திசையில் இருந்தும், நாளை முதல் 3 நாட்களுக்கு தென்கிழக்கு திசையில் இருந்தும் காற்று வீசும். வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக முறையே 93.2, 95, 96.8, 96.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 73.4 டிகிரியாகவும் இருக்கும். மேலும் காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக முறையே 90, 90, 85, 85 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 50, 50, 45, 40 சதவீதமாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்தவரையில் நாமக்கல் மாவட்டத்தின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. உயர்ந்து வரும் பகல் மற்றும் இரவு வெப்ப அளவுகளால் கோழிகளிடையே தீவன எடுப்பு குறையும். மேலும் வயதான மற்றும் அதிக எடையுடைய முட்டைக்கோழி வகைகளில் அதிக வெப்ப அதிர்ச்சி காரணமாக இறப்பும் ஏற்படலாம். எனவே லேசான மழை காரணமாக, அதிக ஈரப்பதம் மற்றும் வெப்ப அதிர்ச்சிக்கு வாய்ப்பு உள்ளதால், பண்ணையாளர்கள் மதியம் 1 மணிக்கு மேல் 5 மணி வரை தீவனம் அளிப்பை நிறுத்தி கோழிகளின் இறப்பை தவிர்க்கலாம்.

கடந்த வாரம் இறந்த கோழிகள் பெரும்பாலும் வெப்ப அயற்ச்சி காரணமாக பாதிக்கப்பட்டு இறந்தது கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடந்த ஆய்வில் தெரியவந்து உள்ளது. எனவே, பண்ணையாளர்கள் அதற்கு தகுந்தாற்போல் சிறந்த கோடைகால மேலாண்மை முறைகளை கையாள வேண்டும். மேலும், கோடை வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க வெயில் நேரங்களில் தெளிப்பான்களை உபயோகிக்குமாறும் தீவனத்தில் சமையல் சோடா மற்றும் தாது உப்பு கலவைகளை உபயோகிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story