அன்னவாசலில் ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் பார்வையாளர் பலி 24 பேர் காயம்


அன்னவாசலில் ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் பார்வையாளர் பலி 24 பேர் காயம்
x
தினத்தந்தி 7 March 2020 11:30 PM GMT (Updated: 7 March 2020 5:16 PM GMT)

அன்னவாசலில் நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பார்வையாளர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 24 பேர் காயமடைந்தனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் தர்ம சமவர்த்தினி சமேத விருத்தபுரீஸ்வரர் கோவிலில் தேரோட்டத்தையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி கோவில் திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து ஜல்லிக்கட்டை வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் உறுதி மொழி யுடன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 225 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடின. பல காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் களத்தில் நின்று விளையாடியது பார்வையாளர்களை கவர்ந்தன. இதில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர், சேலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 1,062 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

ஒருவர் பலி- 24 பேர் காயம்

காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் புங்கினிப்பட்டியை சேர்ந்த சத்யா (வயது 23), கீரனூரை சேர்ந்த செல்வக்குமார் (25), சித்தன்னவாசலை சேர்ந்த முருகேசன் (28), திருச்சியை சேர்ந்த ஹரீஸ் (25), கீரனூரை சேர்ந்த முரளிதரன் (35), பணம்பட்டியை சேர்ந்த கணேசன் (49), இலுப்பூரை சேர்ந்த ஜீவானந்தம் (32), பார்வையாளர்கள் மதியநல்லூரை சேர்ந்த வெள்ளைச்சாமி (45), இலுப்பூரை சேர்ந்த ஜெகன் (30), புதூரை சேர்ந்த கருப்பையா (56), நார்த்தாமலை ஆவுடையான்காட்டை சேர்ந்த சின்னத்துரை (35) உள்பட 25 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் படுகாயமடைந்த முரளிதரன், கணேசன், ஜீவானந்தம், சின்னத்துரை உள்பட 10 பேர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியிலேயே சின்னத்துரை பரிதாபமாக இறந்தார்.

பரிசுகள்

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் வெள்ளி நாணயம், சைக்கிள், குக்கர், மிக்சி, மின் விசிறி, கட்டில், அயன்பாக்ஸ், சில்வர்பாத்திரம், பணம், வேட்டி போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

திரளான பொதுமக்கள்

ஜல்லிக்கட்டு நிபந்தனைகளின் படி முறையாக நடைபெறுகிறதா என்பதை அரசு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தனர். ஜல்லிக்கட்டை வட்டாட்சியர் முருகேசன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சின்னத்தம்பி, ஒன்றிய தலைவர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் சாம்பசிவம், மிராசுதார் பாலாஜி, வருவாய்த்துறை, கால்நடைத்துறை அதிகாரிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

இதில் சிலர் சரக்கு வேன், டிராக்டர், லாரி உள்ளிட்ட வாகனங்களில் ஏறி நின்று ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர். ஜல்லிக்கட்டை முன்னிட்டு இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிகாமணி தலைமையில் அன்னவாசல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story