திருச்செந்தூரில் கோலாகலம்: சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


திருச்செந்தூரில் கோலாகலம்:  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 8 March 2020 11:00 PM GMT (Updated: 8 March 2020 12:32 PM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

மாசி திருவிழா 

‘தமிழ் கடவுள்’ முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2–ம் படை வீடாக பெருமை பெற்று விளங்கும் ‘திருச்சீரலைவாய்’ என்று அழைக்கப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த மாதம் 28–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி–அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10–ம் திருநாளான நேற்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கீழ ரதவீதி தேரடி திடலில் உள்ள சிறிய தேரில் விநாயகரும், பெரிய தேரில் வள்ளி–தெய்வானை அம்பாள்களுடன் சுவாமி குமரவிடங்க பெருமானும், மற்றொரு தேரில் தெய்வானை அம்பாளும் எழுந்தருளினர்.

அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் தேர்களில் எழுந்தருளிய விநாயகர், சுவாமி–அம்பாள்களுக்கு சூட்டுவதற்காக ஏராளமான மாலைகளை வழங்கினர். அந்த மாலைகள் விநாயகர், சுவாமி–அம்பாள்களுக்கு சூட்டப்பட்டன. காலை 6.10 மணிக்கு விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அந்த தேர் நான்கு ரத வீதிகளை சுற்றி, 6.50 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

தேரோட்டம் 

இதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான்–வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளிய பெரிய தேரோட்டம் தொடங்கியது. கோவில் தக்காரும், ‘மாலை முரசு’ நிர்வாக இயக்குனருமான இரா.கண்ணன் ஆதித்தன், இரா.கதிரேச ஆதித்தன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், சின்னப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கோவில் செயல் அலுவலர் அம்ரித், பா.ஜ.க. மாநில விவசாய அணி பொதுச் செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார், ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், தங்கேச ஆதித்தன், குமரேச ஆதித்தன், சிவனேச ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், குமரகுருபர ஆதித்தன், ஜவகர் சொக்கலிங்க ஆதித்தன், ஜெயேந்திர ஆதித்தன், கே.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், கோகுல ஆதித்தன், முருகன் ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விண்ணதிர பக்தி கோ‌ஷங்கள் 

அலங்கரிக்கப்பட்ட தெய்வானை யானை முன்செல்ல, பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். தேரோட்ட விழாவில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் ‘கந்தனுக்கு அரோகரா, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ போன்ற பக்தி கோ‌ஷங்களை விண்ணதிர எழுப்பியவாறு, வடம் பிடித்து தேரை இழுத்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் மேள வாத்தியங்களுடன் பஜனை பாடல்களை பாடியவாறு, தேரின் முன்பாக சென்றனர். பக்தர் ஒருவர் மயில் இறகுகளால் செய்யப்பட்ட பெரிய விசிறியால், தேர் இழுத்த பக்தர்களுக்கு விசிறியவாறு சென்றார். பக்தர்கள் வெள்ளத்தில் நான்கு ரத வீதிகளிலும் தேர் அசைந்தாடி வந்தது கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.

முருக பெருமானுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து பாத யாத்திரையாக வந்த ஏராளமான பக்தர்கள், தேரின் முன்பாக காவடி எடுத்து ஆடியவாறு சென்றனர். சுவாமி தேர் காலை 9.05 மணிக்கு நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து தேரில் வீற்றிருந்த சுவாமி–அம்பாள்களுக்கு தீபாராதனை நடந்தது. அப்போது பக்தர்கள் தேரை தொட்டு வணங்கி, சுவாமி–அம்பாள்களை வழிபட்டனர்.

அம்பாள் தேர் 

இதைத்தொடர்ந்து 3–வதாக தெய்வானை அம்பாள் எழுந்தருளிய தேரோட்டம் நடந்தது. காலை 9.15 மணிக்கு தெய்வானை அம்பாள் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளின் வழியாக சுற்றி வந்த தேர் காலை 10.25 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

தேரோட்ட விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. என்.கே.பெருமாள், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் மகேந்திரன், காந்தி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் பழக்கடை திருப்பதி, கூட்டுறவு சங்க தலைவர்கள் கோட்டை மணிகண்டன், பூந்தோட்டம் மனோகரன், தொழில் அதிபர்கள் ரமணி, சுதர்சன் வடமலைபாண்டியன், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற நெல்லை மாவட்ட துணை செயலாளர் செல்லத்துரை உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் திரளான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து, தேரோட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு பஸ்கள் 

வணிகர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில், ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர் மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் ஆகியோர் மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தலைமையில், நூற்றுக்கணக்கான போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்று, தெப்பத்திருவிழா 

11–ம் திருநாளான இன்று (திங்கட்கிழமை) மாலை 4.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான்–தெய்வானை அம்பாள் எழுந்தருளி, சன்னதி தெருவில் உள்ள யாதவர் மண்டபத்தில் சேர்கிறார்கள். அங்கு சுவாமி–அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. இரவு 7 மணிக்கு சுவாமி–அம்பாள் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி, வெளிவீதி வழியாக நெல்லை நகரத்தார் தெப்பக்குளம் மண்டபத்தை சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்காரமாகி, சுவாமி–அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளி, 11 முறை சுற்றும் தெப்பத்திருவிழா நடக்கிறது.

விழாவின் நிறைவு நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு சுவாமி–அம்பாள் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். இரவு 9 மணிக்கு சுவாமி–அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று கோவிலை சேர்கிறார்கள்.

புதுச்சேரி முதல்–மந்திரி 

முன்னதாக மாசித்திருவிழாவை முன்னிட்டு, புதுச்சேரி முதல்–மந்திரி நாராயணசாமி காலை 6 மணிக்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

தேரோட்ட துளிகள் 

* மாசித்திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் வந்து, நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். காவடி எடுத்து வந்த பக்தர்கள் இடும்பன் சுவாமி ஆடியவாறு, கோவில் கிரிப்பிரகாரத்தை வலம் வந்து, வள்ளி குகை முன்பு காவடியை இறக்கி வைத்து ஆடினர்.

* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சந்தன மலையில் இருப்பதாக ஐதீகம். இதனால் கோவில் பெருமாள் சன்னதியிலும், வள்ளி குகையிலும் உள்ள சந்தன மலையை பக்தர்கள் தொட்டு வணங்கினர். சிலர் சந்தன மலையை சுரண்டி, தங்களது உடலில் பூசினர். குழந்தை இல்லாதவர்கள் சந்தன மலையில் தொட்டிலை கட்டியும், திருமணம் ஆகாதவர்கள் மஞ்சள் கயிறு கட்டியும் வழிபட்டனர்.

* மாசி மகத்தை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி விட்டு, மூவர் சமாதியிலும் வழிபட்டனர். பெரும்பாலான பக்தர்கள் தெப்பக்குளத்திலும் புனித நீராடினர்.

* தேரோட்டத்தின்போது 16 அடி நீள அலகு குத்திய பக்தர், சுவாமி தேரின் முன்பாக சென்றார்.

Next Story