ஓசூரில் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


ஓசூரில் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 9 March 2020 10:30 PM GMT (Updated: 9 March 2020 8:57 PM GMT)

ஓசூரில் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வர சாமி மலைக்கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா, ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கோவில் தேரோட்டம் நேற்று ஓசூர் தேர்பேட்டையில் நடைபெற்றது. விழா பால் கம்பம் நட்டு, தேர் கட்டும் பணியுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து ஓசூர் தேர்பேட்டையில் உள்ள கல்யாண சூடேஸ்வரர் கோவிலில் அங்குரார்ப்பணம் நிகழ்ச்சியும், பின்னர் திருக்கொடியேற்றமும் நடந்தது.

விழாவையொட்டி தினமும் இரவில், சாமி சிம்ம வாகன உற்சவம், மயில், நந்தி, நாக வாகனம் மற்றும் ரிஷப வாகன உற்சவங்கள் நடைபெற்றது. மேலும், சாமிக்கு புஷ்ப அலங்காரம், புஷ்ப சாற்றுப்படி ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு, சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வர சாமி, யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கலெக்டர்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமியை வைத்து ஓசூர் தேர்பேட்டையில் தேரோட்டம் நடைபெற்றது.

முன்னதாக சிறிய தேரில் விநாயகர் சிலையை வைத்து தேர் இழுத்து செல்லப்பட்டது. சந்திரசூடேஸ்வரர் வைக்கப்பட்டிருந்த பெரிய தேரோட்டத்தை ஓசூர் உதவி கலெக்டர் குமரேசன், செல்லகுமார் எம்.பி., ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஸ்ரீ கல்யாண சூடேஸ்வரர் ரதோற்சவ கமிட்டி தலைவருமான கே.ஏ.மனோகரன், பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். பெரிய தேரை தொடர்ந்து, மரகதாம்பிகை அம்மனை வைத்து மற்றொரு தேர் இழுத்து செல்லப்பட்டது. தேரோட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், மாவட்ட கலெக்டர் பிரபாகர் தேர்பேட்டைக்கு வந்து தேரை இழுத்து சாமியை வழிபட்டார். விழாவையொட்டி ஓசூர் தேர்பேட்டையில் சிவனடியார்கள், திருத்தொண்டர்கள் கூட்டம், வீரசைவ லிங்காயத்து நலச்சங்கம், பிராமணர் நலச்சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பிலும், தனியார் நிறுவனங்கள் சார்பிலும், ஓசூர் நகரில் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் பக்தர்கள் சார்பிலும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர், நீர்மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நாளை தெப்ப உற்சவம்

விழாவில், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் கே.பாலசுப்பிரமணியன், ஓசூர் நகர அ.தி.மு.க. செயலாளர் எஸ்.நாராயணன், பா.ஜ.க. மேற்கு மாவட்ட தலைவர் எம்.நாகராஜ், முன்னாள் ஓசூர் நகர்மன்ற தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன், சேரன், தொழில் அதிபர்கள் சி.ஆனந்தய்யா, ஆர்.பாபு, சி.சுப்பிரமணியன், எம்.ராகவேந்திரா, வி.முத்துகிருஷ்ணன், ஓசூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் கே.குருசாமி, சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவில் முன்னாள் அறங்காவலர் குழத்தலைவர் கே.வரதராசன், கல்யாண சூடேஸ்வரர் கமிட்டி துணைத்தலைவர் வி.எம்.அசோக்குமார், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் பி.சீனிவாசன், ஜி.நந்தகுமார், கூட்டுறவு சங்க உறுப்பினர் ரூபா நந்தகுமார் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் ஓசூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்தும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு ராவண வாகன மற்றும் பல்லக்கு உற்சவமும், நாளை(புதன்கிழமை) தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. தேர்த்திருவிழாவையொட்டி, ஓசூர் நகரமே விழாக்கோலம் பூண்டது.

சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி ஓசூர் டி.வி.எஸ். நகரில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பி.ஆர்.வாசுதேவன் தலைமையில் பக்தர்களுக்கு நீர், மோர், பாசி பருப்பு, பழங்கள் வழங்கப்பட்டன. இதில் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

Next Story