மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றாவிட்டால் 3 மாதத்தில் பதவியை ராஜினாமா செய்வேன் கவர்னர் முன்னிலையில் அமைச்சர் பேச்சு


மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றாவிட்டால் 3 மாதத்தில் பதவியை ராஜினாமா செய்வேன் கவர்னர் முன்னிலையில் அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 10 March 2020 11:47 PM GMT (Updated: 10 March 2020 11:47 PM GMT)

மக்கள் நல திட்டங்களை 3 மாதத்துக்குள் நிறைவேற்றாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கவர்னர் கிரண்பெடி முன்னிலையில் அமைச்சர் கந்தசாமி பேசினார்.

புதுச்சேரி,

புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் சர்வதேச மகளிர் தினவிழா ஜெயராம் திருமண நிலையத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அரசு செயலாளர் ஆலிஸ்வாஸ் வரவேற்று பேசினார். முதன்மை விருந்தினராக கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டார்.

விழாவில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-

மகளிரை ஆண்கள் செயல்படாமல் விட்டால் நாடு முன்னேற்றம் அடையாது. அரசு ஊழியராக பெண் இருந்தால் அவரது ஏ.டி.எம். கார்டை ஆண்தான் வைத்திருப்பார். பெண்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த விடுவதில்லை.

அங்கன்வாடி ஊழியர்கள்

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்த போது நடவடிக்கை எடுத்தனர். ஆனால் முடியவில்லை. எனவே நமது கவர்னர் பிரதமரிடம் பேசி அதை கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள் பலர் பணிநிரந்தரம் ஆகாமல் உள்ளனர்.

அவர்களை நிரந்தரம் செய்வது தொடர்பாக நானோ, முதல்அமைச்சரோ அறிவித்தால் நடைமுறைக்கு வராது. எனவே கவர்னர் அதை அறிவித்து செயல்படுத்த வேண்டும். அவர்களுக்கு 2 ஆண்டு களாக போனஸ் வழங்கப் படவில்லை. அதற்கு நாங்கள் காரணம் அல்ல. அப்போதிருந்த நிதித்துறை செயலாளர் கோப்பில் எழுதி வைத்து விட்டார்.

கவர்னர் திறமையானவர்

அரசு பணிகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும். அதை தர அமைச்சரவை தயாராக உள்ளது. பாப்ஸ்கோ ஊழியர்கள் பலமாதங்களாக சம்பளம் இல்லாமல் உள்ளனர். இதற்கும் நாங்கள் காரணம் அல்ல. கடந்த ஆட்சியில் முதல்-அமைச்சராக இருந்த ரங்கசாமிதான் அவர்களை பணியமர்த்தினார்.

அந்த பெண்கள் சம்பளம் கேட்டு என்னிடம் வந்து பேசியது மிகவும் வருத்தமாக இருந்தது. சம்பளமில்லாமல் இருக்கும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டிய பொறுப்பு கவர்னர் மற்றும் அமைச்சரவைக்கு உள்ளது. இல்லாவிட்டால் அந்த பாவம் நம்மையே சேரும். கவர்னருக்கும், அமைச்சரவைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கவர்னர் திறமையானவர் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

எங்கோ தவறு

அதேநேரத்தில் நமது முதல்-அமைச்சரும் 23 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்துள்ளார். ஆனால் அவர்கள் இணைந்து செயல்படுவதில் எங்கோ ஓரிடத்தில் தவறு உள்ளது. 2 பேரும் சேர்ந்து செயல்பட வேண்டும். ஏனெனில் எனது துறைதான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ரேஷன்கடைகள் மூடப்பட்டுள்ளன. பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு சம்பளமில்லை. சுகர்மில் ஓடவில்லை. ரோடியர், பாரதி, சுதேசி மில்கள் மூடப்பட்டுள்ளன. அங்கன்வாடியில் 4 ஆண்டுகளாக காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. வேலையில்லாததால் இளைஞர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

ராஜினாமா

நாங்கள் இலவச அரிசி போடவேண்டும் என்கிறோம். கவர்னர் பணம் போடவேண்டும் என்கிறார். அரிசி வழங்காத 22 மாதத்துக்கும் பணம் வழங்க கவர்னரும், முதல்-அமைச்சரும் நிதி தரவேண்டும். அதற்கான நிதியை தயார் செய்யவேண்டும்.

இதுபோன்ற எனது கோரிக்கைகளை 3 மாதத்தில் நிறைவேற்ற வேண்டும். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற கவர்னர் ஒத்துழைப்பு தர வேண்டும்.இல்லாவிட்டால் சோனியாகாந்தி, ராகுல்காந்தியை சந்தித்து எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன். அதன்பின் மக்களோடு மக்களாக இருந்து போராடுவேன்.

நான் ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சரையும் பார்ப்பேன். இதை நான் அரசியலுக்காக பேசவில்லை. எதையும் செய்ய முடியாமல் நான் அமைச்சராக இருக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.

கவர்னரிடம் மனு

அதைத்தொடர்ந்து தனது கோரிக்கைகள் தொடர்பாக மனு ஒன்றை கவர்னர் கிரண்பெடியிடம் அமைச்சர் கந்தசாமி வழங்கினார். மேலும் தனது பேச்சினை மொழி பெயர்த்து கவர்னரிடம் சொல்லுமாறு கவர்னரின் தனிச்செயலாளர் ஸ்ரீதரனிடம் அமைச்சர் கந்தசாமி தெரிவித்திருந்தார். அதன்படி அமைச்சர் கந்தசாமி பேசப்பேச தனிச்செயலாளர் ஸ்ரீதரன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கவர்னரிடம் சொன்னார்.

Next Story