கடலில் மீனவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தேசிய மீனவர் அமைப்பினர் கலெக்டரிடம் மனு


கடலில் மீனவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தேசிய மீனவர் அமைப்பினர் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 11 March 2020 11:45 PM GMT (Updated: 11 March 2020 7:08 PM GMT)

கடலில் மீனவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மீனவர் அமைப்பினர் நாகை கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்,

நாகையை அடுத்த கீச்சாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 2 விசைப்படகுகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி வெள்ளப்பள்ளம் கிராமத்தின் கரையோரத்தில் மீன்பிடிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது தேசிய மீனவர் கூட்டமைப்பை சேர்ந்த வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த விஜய், பிரசாந்த், தினே‌‌ஷ், ஆனந்தவேல், முத்துசாமி, முருகானந்தம் ஆகியோர் தடை செய்யப்பட்ட சுருக்குவலையை பயன்படுத்த கூடாது என விசைப்படகு மீனவர்களிடம் கூறினர். ஆனால் அவர்கள் அதையும் மீறி விசைப்படகு மூலம் பைபர் படகு மீது மோதி உயிர் சேதம் ஏற்படுத்த முயற்சித்துள்ளனர். அதில் பைபர் படகு கடலில் கவிழ்ந்தது.

நடவடிக்கை

இதில் வெள்ளப்பள்ளம் மீனவர்கள் தங்கள் உயிரை பாதுகாத்துக்கொள்ள கடலில் குதித்து தப்பித்தனர். மேலும், இரும்பு ஆயுதங்களை கொண்டு வெள்ளப்பள்ளம் மீனவர்களை விசைப்படகு மீனவர்கள் தாக்கினர். எனவே எங்கள் உயிருக்கு பாதுகாப்பில்லை. விபத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் திருவாரூர் மருத்துவ மனையில் சிகிச்சையில் உள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். எங்கள் உயிரையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story