குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு பாய், தலையணையுடன் கலெக்டர் அலுவலகத்தில் முஸ்லிம்கள் குடியேற முயற்சி


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு பாய், தலையணையுடன் கலெக்டர் அலுவலகத்தில் முஸ்லிம்கள் குடியேற முயற்சி
x
தினத்தந்தி 12 March 2020 12:00 AM GMT (Updated: 11 March 2020 7:18 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் கலெக்டர் அலுவலகத்தில் முஸ்லிம்கள் குடியேற முயன்றதால் பரபரப்பு நிலவியது. அப்போது அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 1,100 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றக்கோரி தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, சேலத்திலும் கோட்டை பகுதியில் முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் போராட்டம் நேற்று 24-வது நாளாக நீடித்து வருகிறது.

குடியேறும் போராட்டம்

இந்தநிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்திற்குள் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என்று பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் அறிவித்திருந்தன. அதன்படி சேலம் கோட்டை பகுதியில் நேற்று மதியம் ஏராளமான முஸ்லிம்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் மதியம் 12 மணியளவில் பாய், தலையணை மற்றும் பாத்திரங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.

இதையொட்டி ஏற்கனவே கலெக்டர் அலுவலகம் முன்பு போலீஸ் கமி‌‌ஷனர் செந்தில்குமார் மேற்பார்வையில் துணை கமி‌‌ஷனர்கள் தங்கதுரை, செந்தில் ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், கலவரங்கள் தடுப்பு வாகனங்களும் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்றுவிடாமல் இருக்க 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தள்ளுமுள்ளு

இதனை தொடர்ந்து ஊர்வலமாக வந்த முஸ்லிம்கள், தடுப்பு வேலிகளை அப்புறப்படுத்தி கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். ஆனால் அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் முஸ்லிம்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

அப்போது, குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டிக்கும் வகையில் சிலர் ‘வேண்டாம் சி.ஏ.ஏ.' என்று வாசகம் எழுதிய பதாகைகளை பாடையாக கட்டி வைத்து அதனை ஊர்வலமாக தூக்கி வந்ததால் பரபரப்பு நிலவியது. கலெக்டர் அலுவலகம் முன்பு ஆங்காங்கே முஸ்லிம்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரியார் மேம்பாலம், கோட்டை மெயின்ரோடு, முள்ளுவாடி கேட், பழைய பஸ் நிலையத்திற்கு செல்லும் வாகனங்கள் மாற்றுவழியில் திருப்பிவிடப்பட்டன.

1,100 பேர் கைது

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கோ‌‌ஷங்களை எழுப்பினர். இதனால் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாகக்கூறி போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களை போலீசார் கைது செய்து வேனிலும், பஸ்களிலும் ஏற்றினர்.

இதையடுத்து அவர்கள் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள நேருகலையரங்கில் காவலில் வைக்கப்பட்டனர். மொத்தம் 1,100 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பாய், தலையணையுடன் முஸ்லிம்கள் குடியேற முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story