பஸ் கண்ணாடியை உடைத்த 8 மாணவர்கள் கைது


பஸ் கண்ணாடியை உடைத்த 8 மாணவர்கள் கைது
x
தினத்தந்தி 12 March 2020 10:15 PM GMT (Updated: 12 March 2020 7:07 PM GMT)

மாநகர பஸ் கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவர்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

திரு.வி.க. நகர்,

சென்னை கடற்கரையில் இருந்து பெரம்பூர் நோக்கி மாநகர பஸ்(தடம் எண் 29 ஏ) சென்று கொண்டிருந்தது. இதில் இருந்த 20-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பாட்டு பாடி, ஆட்டம் போட்டு வந்தனர்.

பஸ் டிரைவர் விஜயகுமார் மற்றும் கண்டக்டர் சுரேஷ் இருவரும் மாணவர்களிடம் இதுபற்றி தட்டிக்கேட்டனர். இதற்கிடையில் ஓட்டேரி மங்களபுரம் பகுதிக்கு பஸ் வந்தது.

அப்போது பஸ்சில் ஏறிய மேலும் சில மாணவர்கள், பஸ்சில் இருந்த மாணவர்களிடம் தகராறு செய்தனர். வாக்குவாதம் முற்றி இருதரப்பு மாணவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பஸ்சின் பக்கவாட்டு கண்ணாடிகளை கற்களை வீசி உடைத்தனர். இதனால் பயணிகள் அலறி அடித்து ஓடினர்.

8 பேர் கைது

இதுபற்றி டிரைவர் விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

பின்னர் சம்பவம் தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான மகேஷ் குமார்(வயது 19), அன்பு(19), மாரிமுத்து(19), கிஷோர்(19) மற்றும் பிரசிடென்சி கல்லூரி மாணவர்களான மேகநாதன்(22), அபிஷேக்(19), அருண்(19) உள்பட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story